பாஜக தலைவர்கள் ரகசியமாக சந்தித்து என்ன சொல்கிறார்கள் தெரியுமா?.. கெஜ்ரிவால் கிளப்பிய பரபரப்பு
அகமதாபாத்: வருகிற குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்றும், பாஜக தலைவர்கள் பலர் ரகசியமாக தன்னை சந்தித்து பேசி வருகின்றனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பேசினார்.
குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் டிசம்பர் மாதத்தில் அந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
குஜராத்தை பொருத்தவரை பாஜகவின் கோட்டையாக உள்ளது. சுமார் கால் நூற்றாண்டு காலம் அங்கு பாஜக ஆட்சியில் உள்ளது.

குஜராத் தேர்தல்
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த உற்சாகத்துடன் இருக்கும் ஆம் ஆத்மி, குஜராத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நம்புகிறது.

குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். வேட்பாளர்கள் பட்டியலையும் பல்வேறு கட்டங்களாக வெளியிட்டு வருகிறார். இப்படி குஜராத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் குஜராத்தின் வல்சத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

என்னை ரகசியமாக சந்திக்கின்றனர்
பாஜக தலைவர்கள் பலரும் என்னை ரகசியமாக சந்திக்கின்றனர். ஆட்சியில் உள்ள பாஜகவை எப்படியாவது வீழ்த்துங்கள் என என்னிடம் சொல்கின்றனர். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் அந்தக்கட்சி தலைவர்களும் தொண்டர்களும் ஆம் ஆத்மிக்கு ரகசியமாக வேலை செய்யுங்கள் என சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தீயசக்திகள் உள்ளன
தொடர்ந்து, இந்துக்களுக்கு எதிரானவர் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற வாசகங்களுடன் குஜராத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது தொடர்பாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டதற்கு பின்னால் தீயசக்திகள் உள்ளன. பாஜகவின் 27 ஆண்டு கால ஆணவத்தை உடைக்க வேண்டியுள்ளது. உங்களுக்கு தொழில்கள் இருக்கின்றன. எங்களிடம் இணைந்தால் உங்கள் தொழில் பாதிக்கப்படும்.

ஆம் அத்மிக்கு வாக்களிக்க வேண்டும்
எனவே நீங்கள் அங்கேயே இருங்க.. ஆனால் பாஜகவை தோற்கடிக்க ரகசியமாக பணி செய்யுங்கள்... காங்கிரஸ் கட்சியினர் அச்சப்பட வேண்டாம்... நீங்கள் காங்கிரசில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் சேர்ந்துவிடலாம். காங்கிரசை மறந்து விடுங்கள்'' என்றார். தொடர்ந்து அவர் பேசியதாவது:- தீயசக்திகளை விரட்டியடிக்க ஆம் அத்மிக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். புதிய குஜராத்தை கட்டமைக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்.

இந்த முறையே கெஜ்ரிவால் ஜெயிப்பார்
கட்சியை மறந்துவிட்டு குஜராத்திற்காக பணியாற்றுங்கள். நாட்டிற்காக பணியாற்றுங்கள். கெஜ்ரிவால் நல்லவராக இருந்தாலும் இந்த முறை அவர் ஜெயிக்க மாட்டார். அடுத்த முறைதான் ஜெயிப்பார் என்று உங்களிடம் யாராவது சொன்னால், அவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்... அவர்களிடம் சொல்லுங்கள், அடுத்த முறை அல்ல.. இந்த முறையே கெஜ்ரிவால் ஜெயிப்பார் என்று.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications