தொகாடியா விஷ(ம)யத்தில் பெரும் அமைதி காக்கும் பாஜக.. ஏன்?
பாவ்நகர்: ஹிந்துக்களின் வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை விதித்து விஷமத்தனத்தை விதைத்த தொகாடியா மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் பாரதிய ஜனதா மிக மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது.
லோக்சபா தேர்தல் காலம்.. வாக்குகள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போகும் என அலைபாய்ந்து கொண்டிருந்தாலும் இறுதி நேரத்தில்தான் வாக்குகள் எந்த அணிக்கு என உறுதியாகும்.. அப்படி உறுதியாகும் வாக்குகள்தான் வெற்றி தோல்வியையும் தீர்மானிக்கும்.
லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் இந்து, முஸ்லீம்களின் வாக்குகளை அப்படியே அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக அங்கிங்குமாக மதவெறி பேச்சுகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான் போன்றவர்கள் கார்கில் போரை வென்றது முஸ்லீம் வீரர்கள் தான் என்று பேசியதும் இந்த வகையரா தான்.
கிரிராஜ்சிங் பேச்சு
அதே போல சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் கிரிராஜ்சிங், மோடியை எதிர்ப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு ஓடிப்போக வேண்டும் என்று சொன்னார்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ வரிந்து கட்டிக் கொண்டு கிரிராஜ்சிங்கை கண்டித்தது. அவர் கருத்து உடன்பாடானது அல்ல என்றெல்லாம் பிரகடனப்படுத்தியது.
தொகாடியாவின் நச்சு விதை பேச்சு
ஆனால், தற்போது கிரிராஜ்சிங் பேசியதைவிட மிக மோசமாக நாட்டை பிளவுபடுத்தும் வகையில் வன்முறை வெறியாட்டத்துக்கு வித்திடும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச்செயலர் தொகாடியா, குஜராத்தில் பாவ் நகரில் பேசுகையில், ஹிந்துக்கள் வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க கூடாது; அப்படி வாங்கிய வீடுகளில் இருந்து முஸ்லிம்கள் காலி செய்ய வேண்டும்; இல்லையெனில் ஆக்கிரமிப்போம் என்று நாசகார நச்சு விதையை தூவிவிட்டிருக்கிறார்.
பம்முகிறது பாஜக
ஆனால் கிரிராஜ்சிங்கை எதிர்த்த பாரதிய ஜனதா தொகாடியா விஷயத்தில் பம்மிக் கொண்டிருக்கிறது.. இன்னும் மேலே போய் தொகாடியா அப்படி பேசவே இல்லை என்று பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். வக்காலத்தும் வாங்குகிறது.
ஆர்.எஸ்.எஸ்.- பாஜக வக்காலத்து
ஆர்.எஸ்.எஸ். வக்காலத்தை வழிமொழிகிறதாம் பாரதிய ஜனதா. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், நானும் தொகாடியாவிடம் பேசினேன்..அவர் அப்படியெல்லாம் பேசவில்லை என்கிறார். ஆனால், தொகாடியா பேசிய பேச்சை பல சேனல்கள் ஒளிபரப்பிய நிலையில், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தொகாடியா.
தேர்தல் ஆணையம் வழக்கு
ஆனால் தொகாடியாவின் வெறிப்பேச்சை ஊடகங்கள் முழுமையாக ஒளிபரப்பிய பின்னரும் நடப்பதெல்லாம் நமக்கு நன்மைக்குத்தான் என்கிற வகையில் எகிறாமல் விஷமத்தனமாக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்து ஓட்டுக்கள் தங்களுக்கு சாதகமாக திரும்பும் என்பது பாஜகவின் எண்ணம் என்கிறார்கள். இந் நிலையில் தொகாடியா மீது குஜராத் அரசு வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அமைதி காக்கும் நிலையில், இப்போது தேர்தல் ஆணையம் தான் தலையிட்டு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
எல்லாம் ஓட்டுக்காக...
தொகாடியாவின் பேச்சு மூலம் ஓட்டு போடாவிட்டால் நம்ம கதி அதோ கதிதான் என்று ஹிந்துக்களை அச்சமூட்டும் யுக்தியாகவும் அதே நேரத்தில் தொகாடியா பேச்சுகளால் ஹிந்துக்களின் வாக்குகள் 'ஒட்டுமொத்தமாக' நமக்கே வந்துவிழும் என்ற நோக்கமும்தான். ஆக எப்படியோ ஹிந்துக்களின் ஓட்டுகள் மொத்தமாக நமக்கு விழும் என்பதுதான் பாஜகவின் கணக்கு, இதுதான் பாரதிய ஜனதாவின் இறுதி நேர 'தேர்தல் வியூகமும்" கூட என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதனால் தான் தொகாடியா விஷயத்தில் பாஜக அமைதி காக்கிறது என்கிறார்கள்.