பாஜக ஆளும், ஆள துடிக்கும் மாநிலங்களுக்கு அடித்தது ஸ்மார்ட் சிட்டி ஜாக்பாட்! பீகாருக்கு பெப்பே
டெல்லி: மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வாகியுள்ள 20 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட நான்கு தென் மாநிலங்களில் இருந்தும் ஸ்மார்ட் நகரங்கள் தேர்வாகியுள்ளன. அதேநேரம், பீகார் மாநிலம் புறம் தள்ளப்பட்டுள்ளது. மம்தா ஆளும் மேற்கு வங்கத்திலும் எந்த நகரமும் தேர்வாகவில்லை.
முதல்கட்டமாக 20 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை இன்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். அதில் தமிழகத்தின், சென்னை மற்றும் கோவை நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சிறப்பு நிதி கிடைக்கும்.
தெற்கு வாழ்கிறது
கேரளாவிலிருந்து கொச்சியும், கர்நாடகாவில், பெலகாவி (பெல்காம்), தாவணகெரே ஆகிய நகரங்களும், ஆந்திராவிலிருந்து விசாகப்பட்டிணம், காக்கிநாடா ஆகிய நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனவே, 4 தென் மாநிலங்களில் கேரளா தவிர பிற 3 மாநிலங்களில் இருந்தும் தலா 2 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தேர்வாகியுள்ளன.
பீகாருக்கு கல்தா
அதேநேரம், பாஜக கூட்டணியால் பெரிதும் சோபிக்க முடியாத தெலுங்கானா மாநிலத்தில் எந்த நகரமும் இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதேபோல, சமீபத்தில், சட்டசபை தேர்தலில், படுதோல்வியை பரிசளித்த பீகார் மாநிலத்திற்கும் கிஃப்ட் கிடைக்கவில்லை.
மம்தாவுக்கு ஏமாற்றம்
எதிரும், புதிருமாக உள்ள மம்தா ஆளும் மேற்கு வங்கத்திற்கும் ஸ்மார்ட் பாக்கியம் கிடைக்கவில்லை. அதேநேரம், அதற்கும் கிழக்கே அமைந்துள்ள அசாமில், கவுகாத்தி இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அசாமில் இவ்வாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள மற்றும் பாஜக கூட்டணி வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப்பில், லூதியானா ஸ்மார்ட் சிட்டியாக தேர்வாகியுள்ளது.
டெல்லிக்கு தனி கவனிப்பு
தலைநகர் டெல்லியின் என்டிஎம்சி ஏரியாவும் ஸ்மார்ட் சிட்டியாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் கவிழ்த்துவிட்டாலும், மக்களவை தேர்தலில் வாரி வழங்கியது டெல்லி என்பது பாஜகவுக்கு மறந்திருக்காது.
பாஜக ஆளும் மாநிலங்கள்
ஜெய்ப்பூர், உதய்ப்பூர் ஆகியவை ராஜஸ்தான் மாநில நகரங்கள், அகமதாபாத், சூரத் ஆகியவை குஜராத் நகரங்கள், புனே, சோலாப்பூர் ஆகியவை மகாராஷ்டிரா மாநில நகரங்கள், போபால், ஜபல்பூர் ஆகியவை மத்திய பிரதேச நகரங்கள். இம்மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பிஜு ஜனதா ஆளும் ஒடிசாவில், அம்மாநில தலைநகர், புவனேஸ்வர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தமிழகம், கேரளா
தமிழகம் மற்றும் கேரளாவில் இவ்வாண்டு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. கர்நாடகாவில், அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் பாஜக பலம் பெற்று வருகிறது. ஆந்திராவில் ஏற்கனவே பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.