பிரியங்கா கணவர் வாங்கிக் குவித்த நிலங்கள்... வீடியோ வெளியிட்டது பாஜக
டெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வத்ராவுக்கு எதிராக எட்டு நிமிட வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது.
நில அபகரிப்பு புகார்கள் குறித்த வீடியோ காட்சி இது. இந்த வீடியோவை பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று வெளியிடடார்.
இந்த வீடியோவுக்கு காந்தி குடும்பம் பதிலளிக்க வேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது.
ராபர்ட் பற்றி பிரியங்கா விளக்கட்டும்
இதுகுறித்து கூறிய பிரசாத், குஜராத் வளர்ச்சி குறித்து விமர்சிக்கும் பிரியங்கா காந்தி, தன்னுடைய கணவர் ராபர்ட் வதேராவின் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து பதில் சொல்ல வேண்டும்.
நூற்றுக்கணக்கான நிலங்கள் வந்தது எப்படி...
ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ராபர்ட் வதேரா வாங்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்களில் மட்டும் ராபர்ட் வதேரா நிலம் வாங்குவது ஏன்.
வத்ராவைக் காக்க முயல்கிறது காங்கிரஸ்
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எவ்வாறு ப.சிதம்பரம் காப்பாற்றப்பட்டாரோ, ரயில்வே ஊழல் வழக்கில் எவ்வாறு பவன்குமார் பன்சால் காப்பாற்றப்பட்டாரோ, நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வரகிறாரோ, அதேபோல் ராபர்ட் வதேராவையும் காப்பாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு மேல் போபர்ஸ் வழக்கு குறித்து நான் பேசவில்லை.
பெருமளவில் விதி மீறல்
வத்ரா நிலம் வாங்கியதில் விதிமுறைகள் மிகப் பெரிய அளவில் மீறப்பட்டுள்ளது. காந்தி குடும்பத்தின் செல்வாக்கை வத்ரா பயன்படுத்தி வாங்கிக் குவித்துள்ளார் என்றார் பிரசாத்
மருமகன்..
இதுதவிர 'Damad Shree' (மருமகன்) என்று பெயரிடப்பட்ட 6 பக்க புத்தகத்தையும் பாஜக வெளியிட்டது. அதில் ராஜஸ்தான், ஹரியானாவில் ராபர்ட் வத்ரா வாங்கிய நிலங்கள் குறித்த விவரத்தை அது வெளியிட்டுள்ளது.