பாஜக ஆளும் உ.பி, ம.பி, குஜராத்- சுகாதார துறை படுமோசம்-ஆம்புலன்ஸ் கூட இல்லையே-பதறும் கட்சி சீனியர்கள்
லக்னோ/போபால்/காந்திநகர்: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் படுமோசமாக இருப்பதாக அந்த கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களே பகீர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இதற்கு மாநிலங்களின் அரசு அதிகாரிகளே காரணம் எனவும் பழிபோட்டு தப்பித்தும் வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனாவின் கொடூர தாக்குதல் படுவேகமாக காட்டுத் தீயாக பரவி வருகிறது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 1.85 லட்சம் என்கிற நிலையை கடந்து போய் கொண்டிருக்கிறது.
இதனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் படுவேகமாக முடுக்கிவிடப்பட்டு வருகின்றன.
பாஜக மாநிலங்கள்
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் உ.பி, ம.பி, குஜராத்தில் கொரோனா தடுப்பு கட்டமைப்புகள் படுமோசமாக இருக்கிறது என்பதை பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களே அம்பலப்படுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் மோசமாக நடப்பதாக குற்றம்சாட்டுவதன் மூலம் அவர்களே பாஜக அரசுகள் கொரோனாவை தடுப்பதில் தோல்வி அடைந்திருப்பதாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.
சீர்குலைந்த சுகாதாரம்
உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்ட அமைச்சர் பதக், அம்மாநில சுகாதார துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், மாநில சுகாதாரத் துறை சீர்குலைந்து போயுள்ளது; சட்ட அமைச்சகத்தில் இருந்து போன் போனால் கூட முதல்வர் அலுவலகத்தில் யாரும் எடுப்பது இல்லை. கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு 4 முதல் 7 நாட்களாகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறுகிய தொலைவில் செல்வதற்கு கூட 5 முதல் 6 மணிநேரமாகிவிடுகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம்புலன்ஸ்- பத்மஶ்ரீ எழுத்தாளர் மரணம்
மேலும் சட்ட அமைச்சர் பதக், பத்மஶ்ரீ விருது பெற்ற எழுத்தாளர் யோகேஸ் பிரவீன் மரணம் தொடர்பாகவும் விவரித்துள்ளார். இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள பதக், தலைமை மருத்துவ அதிகாரியை போனில் அழைத்து ஆம்புலன்ஸ், சிகிச்சை தொடர்பாக உத்தரவிட்டிருந்தேன். ஆனால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சென்று சேரவில்லை. அதனாலேயே அவர் உயிரிழக்க நேரிட்டது. அதேபோல் கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்கள் ஒருநாளைக்கு 17,000 தேவை எனில் 10,0000 மட்டும்தான் இருப்பில் உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர் எனவும் பதிவு செய்திருக்கிறார் உ.பி. அமைச்சர் பதக்.
கொரோனா இறப்புகள் மறைப்பு
மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவும் மாஜி சுகாதாரத்துறை அமைச்சருமான அஜய் விஷ்னோயும் அதிகாரிகள் மீதுதான் பழிபோடுகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா உயிரிழப்புகள் 15 முதல் 20 ஆக இருந்தால் அரசு தரப்பில் 3 முதல் 4 என்றுதான் சொல்கின்றனர். ஏன் கொரோனா இறப்புகளை இவர்கள் மறைக்கிறார்கள். சுகாதார அதிகாரிகளின் அக்கறையற்ற நடவடிக்கை தொடர்பாக முதல்வர் சிவராஜ்சிங் சவுகானிடமும் புகார் தெரிவித்தேன் என்கிறார் அஜய் வினோஷி.
சூடு வைத்த கோர்ட்- கொதித்த எம்பிக்கள்
குஜராத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநில உயர்நீதிமன்றமே நேரடியாக இதில் தலையிட்டுவிட்டது. மேலும் மருத்துவமனைகளில் 2கி.மீ தொலைவுக்கு நோயாளிகள் காத்திருப்பது, கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு 5 நாட்கள் எடுத்துக் கொள்வது ஆகியவற்றை சுட்டிக்காட்டியும் குஜராத் பாஜக அரசை வெளுத்து வாங்கிவிட்டது அம்மாநில உயர்நீதிமன்றம். குஜராத் மாநிலத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவிலேயே முதல்வர் ரூபானியுடன் அம்மாநில பாஜக எம்.பி. சி.ஆர். பாட்டீல் மோதியிருக்கிறார். பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு பாஜக எம்.பியோ, குஜராத்தில் நிலைமை படுமோசமாக இருக்கிறது என்கிறார். இதனால் சி.ஆர். பாட்டீல் எம்.பியே, தடுப்பூசிகளை சொந்த செலவில் வாங்கி கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன.