மார்கழி மாசத்துல கல்யாணம் கிடையாது.. குஜராத் தேர்தலை ப்ரீயா வச்சுக்கலாம்.. பாஜக யோசனை!
டிசம்பர் 14 முதல் ஜனவரி 14 இந்து திருமணம் இருக்காது என்பதால் அப்போது குஜராத் சட்டசபை தேர்தலை வைத்துக் கொள்ளலாம் என்று பாஜக தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள பரிந்துரையில் கூறியுள்ளது.
டெல்லி: குஜராத் தேர்தலை டிசம்பர் 14 முதல் ஜனவரி 14 வரையிலான காலகட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் அந்த காலகட்டத்தில் தான் திருமணங்கள் இருக்காது என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக பரிந்துரை செய்துள்ளது.
தேர்தல் நடத்துவது குறித்த தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கையை பாஜக தாக்கல் செய்துள்ளது. குஜராத் மாநில பாஜக சட்டக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளில் டிசம்பர் 14 முதல் ஜனவரி 14 வரை அதாவது மார்கழி மாதத்தில் இந்து மதப்படி திருமணங்கள் நடக்காது.
எனவே இந்த காலகட்டத்தில் தேர்தலை நடத்தலாம். டிசம்பர் 10 முதல் டிசம்பர் 14 வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே மார்கழி மாதத்தில் தேர்தல் நடத்தினால் வாக்காளர்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்களுக்கு உகந்ததாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்கள் பண்டிகைக் காலங்கள், அப்போது அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும். என்ஆர்ஐகள் குளிர் காலத்தில் தான் சுற்றுப்பயணம் வருவார்கள். தேர்தல் என்பது பண்டிகை போல கொண்டாடப்பட வேண்டும் அப்போது தான் அதிக அளவில் மக்களின் பங்களிப்பு இருக்கும்.
அதே சமயத்தில் விதிகளும் எளிமையானதாக இருக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளுக்கு மன்னர் அனைத்து அரசியல் கட்சியினரையும் அழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த வேண்டும். வாக்குச்சாவடிக்கும் முகவர்களுக்கான அலுவலகத்திற்கான தூரத்தை தற்போதுள்ள 200 மீட்டரில் இருந்து 100 மீட்டர் என குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை பாஜக அளித்துள்ளது.