இந்த முறையும் பாஜகவுக்கே மறக்காமல் வாக்குகளை குத்திக் குவித்த "மணி நகர்" தமிழர்கள்!
குஜராத்தில் தமிழர்கள் கணிசமாக வாழும் மணிநகர் தொகுதியில் இந்த முறையும் பாஜக அமோகமாக வெற்றி பெற்றிருக்கிறது. நரேந்திர மோடியை தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏவாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
மணிநகர்: குஜராத்தில் தமிழர்கள் கணிசமாக வாழும் மணிநகர் தொகுதியில் இந்த முறையும் பாஜக அமோகமாக வெற்றி பெற்றிருக்கிறது. நரேந்திர மோடியை தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏவாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததும் இந்த மணிநகர் தொகுதிதான்.
அகமதாபாத் மேற்கு லோக்சபா தொகுதிக்குட்பட்டதுதான் மணிநகர். இத்தொகுதியில் தமிழர்கள் கணிசமாக வாழ்கின்றனர். மொத்தம் 2,49,947 வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர்.
இந்த ஆண்டு தேர்தலில் 64.42% வாக்குகள் பதிவாகி இருந்தது. 2002-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையில் 3 சட்டசபை தேர்தல்களில் மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் மோடி. அதற்கு முன்னர் 1990 முதல் 1998 வரை கம்லேஷ் படேல் பாஜக எம்.எல்.ஏவாக மணிநகரில் வென்றிருந்தார்.
இத்தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. சுரேஷ் பட்டேலையே பாஜக வேட்பாளராக களமிறக்கியது. அவருக்கு எதிராக வெளிநாட்டில் படித்த 34 வயது இளம்பெண் சுவேதாவை காங்கிரஸ் களமிறக்கியது. பெங்களூரு ஐஐஎம்-ல் அரசியல் பாடத்தை கற்றுக் கொண்டு தேர்தலில் குதித்தவர் சுவேதா.
2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மோடியை எதிர்த்து சுவேதா பட், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். மோடியை கடுமையாக எதிர்த்த சஞ்சீவ் பட் என்கிற ஐபிஎஸ் அதிகாரியின் மனைவிதான் இந்த சுவேதா. ஆனால் 86,000 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார். பின்னர் 2014 பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நிலையில் மணிநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை மோடி ராஜினாமா செய்தார்.
இத்தேர்தலில் பாஜகவின் சுரேஷ் பட்டேல் 1,16,113 வாக்குகளைப் பெற்றுள்ளார். காங்கிரஸின் சுவேதா 40,914 வாக்குகளைத்தான் பெற முடிந்தது. இம்முறையும் மணிநகர் பாஜகவின் கோட்டை என்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் பாஜகவை தமிழர்கள் காலடி வைக்கவிடவில்லை. ஆனால் குஜராத்தில் தமிழர்களும் சேர்ந்து மணிநகர் தொகுதியை பாஜகவின் கோட்டையாக்கியே வருகின்றனர்.