கர்நாடகா சட்டசபை தேர்தல்... டிராவிட் மற்றும் கும்ப்ளேவுக்கு வலை வீசுகிறது பாஜக
கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்ப்ளேவை களமிறங்க பாஜக திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்ப்ளேவை களமிறங்க பாஜக
திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக, முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தலைமையிலா பாஜகவும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. கிராமப் பகுதிகள் மற்றும் இளைஞர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக, பல்வேறு பிரபலங்களை கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான கர்நாடகாவைச் சேர்ந்த அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட்டை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அவர்களிடம் பாஜக மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர். ஆனால், இருவரும் எந்த பதிலும் கூறாமல் நழுவி வருகின்றனர். அரசியலில் சிக்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
இருவரில் ஒருவருக்கு மாநில அரசிலும், மற்றொருவருக்கு மத்திய அரசிலும் பதவி தருவதாகவும் பாஜக தூண்டில் போட்டு வருகிறது. குறைந்தபட்சம், பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் பேச்சு நடந்து வருகிறது. ஆனால், இவற்றை டிராவிட் மற்றும் கும்ப்ளே மறுத்துள்ளதாகவும், தங்களை விட்டுவிடும்படியும் கூறியுள்ளதாக தெரிகிறது.
கிரிக்கெட்டின் இந்திய நெடுஞ்சுவரான டிராவிட், 344 ஒருதினப் போட்டிகளில், 10,889 ரன்களும், 164 டெஸ்ட்களில், 13,288 ரன்களும் எடுத்துள்ளார். தற்போது, 19
வயதுக்குட்பட்டோர் இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார். சுழற்பந்து வீச்சாளரான கும்ப்ளே, 271 ஒருதினப் போட்டிகளில், 337 விக்கெட்களும், 132
டெஸ்ட்களில் 619 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கோச்சாக இருந்த அவர், கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார்.