மும்பை புறநகர் ரயில்களில் பில்லி, சூனிய விளம்பரங்களுக்கு தடை.... மீறினால் 7 ஆண்டுச் சிறை
மும்பை: மும்பை புறநகர் ரயில்களில் பில்லி, சூனியம், மந்திரம் போன்ற விளம்பரங்கள் செய்ய அதிரடியாக தடை விதிக்கப் பட்டுள்ளது.
உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் என டிக்கெட்டில் எழுதியுள்ள வாசகத்தைப் படித்துக் கொண்டே புறநகர் ரயிலில் ஏறி உட்கார்ந்தால் திரும்பிய பக்கமெல்லாம் பில்லி, சூனியம், மந்திரம், செய்வினை என விளம்பரங்கள் தான் கண்ணைப் பறிக்கின்றன.
எங்கே, உட்கார இடம் தரவில்லையென்றால் கூட உடனே நமக்கு எதிராக ஏதாவது செய்து விடுவார்களோ என அஞ்சி மற்றவர்களுக்கு இடம் கொடுக்கும் அளவிற்கு ரயிலில் இதுபோன்ற விளம்பரங்கள் அதிகம்.
தற்போது இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக மும்பையில் புறநகர் ரயில்களில் இது போன்ற விளம்பரங்களுக்கு தடை விதித்து உத்தரவிடப் பட்டுள்ளது.
நரேந்திர தபோல்கர்...
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி பில்லி, சூனியம், மந்திரம் போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடிவந்த நரேந்திர தபோல்கர் என்றா சமூக சீர்திருத்தவாதி புனேயில் படுகொலை செய்யப்பட்டார்.
புதிய சட்டம்....
அதன் எதிரொலியாக மூட நம்பிக்கைகளை பரப்பி வருவோரை சிறையில் அடைக்கும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தியது.
விளம்பரத்தடை...
தற்போது அதனைத் தொடர்ந்து, மும்பை புறநகர் ரெயில்களில் பில்லி, சூனியம், மந்திரம் தொடர்பாக விளம்பரப்படுத்த நேற்று ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அபராதம்....
இந்த தடை குறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, 'புறநகர் ரெயில்களில் அனுமதியின்றி விளம்பரம் செய்த 156 பேரிடம் இதுவரை 1.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சிறைக்குள்....
ஏற்கனவே, இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
7 ஆண்டுச் சிறை...
மேலும், மந்திரம், பில்லி, சூனியம் தொடர்பாக ரெயில்களில் விளம்பரம் ஒட்டுபவர்களை கைது செய்து 7 ஆண்டு வரை சிறையில் அடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்' என்றார்.