ஏழைகளின் ஜன்தன் அக்கவுண்டில் குவியும் கறுப்பு பணம்... கண்காணிக்கும் மத்திய அரசு
ஜன்தன் வங்கிக் கணக்குகளில், கறுப்புப் பணம் அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் உள்ள 23 கோடி வங்கி கணக்குகளை, மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளது.
டெல்லி: அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக 2014ம் ஆண்டில் பாஜக அரசு ஜன்தன் யோஜனா எனும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அரசின் மானிய உதவிகள் அனைத் தும் இதன் மூலம் மக்களுக்குச் சென்றடைவதற்காக இந்தக் கணக்கு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டு களாக இந்தக் கணக்கில் பெரும்பாலானவை செயல் பாட்டில் இல்லாமல் இருந்தன.
நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல்,பழைய,500,1,000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து கறுப்பு பணத்தை வெள்ளையாக்க ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர்.
பழைய ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் போட்டு மாற்றிக் கொள்ளலாம் என மோடி அறிவிக்கவே, ஜன்தன் வங்கிக் கணக்கில் பணத்தைப் டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளது. இது அனைத்து அவர்களின் பணமல்ல என்பதுதான் உண்மை. இது அனைத்து அவர்களின் பணமல்ல என்பதுதான் உண்மை.
கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள் ஏழை மக்களுக்கு ஆசைவார்த்தை கூறி கமிஷன் தந்து அவர்களது, ஜன்தன் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர். இதனையடுத்து ஜன்தன் வங்கி கணக்கு களில், திடீரென சில நாட்களாக முதலீடு குவியத் தொடங்கியது. இதனை தடுக்க முடியாததால், அது பற்றி மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு, வங்கிகள் கொண்டு சென்றன.
இதையடுத்து ஜன்தன் வங்கிக் கணக்குகளில், அதிக பட்சம், 49 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என, மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. 50 ஆயிரம் ரூபாய் க்கு மேல் டெபாசிட் செய்ய விரும்புவோரிடம், பணத்திற்கான ஆதாரங்கள் கேட்கப்படும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். ஏழை மக்களின் 23 கோடி, ஜன்தன் வங்கிக் கணக்குகளும் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன. எவ்வளவுதான் கண்காணித்தாலும் கறுப்பை வெள்ளையாக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் பண முதலைகள்.