குஜராத், தமிழக அரசுகளுடன் இணைந்து பணியாற்றிய 'கறுப்பு பட்டியல்' என்.ஜி.ஓ
காந்திநகர்: மத்திய உளவுத்துறையால் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள என்.ஜி.ஓக்களில் ஒன்று, பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத் அரசுக்கு பல திட்டங்களில் உதவிகரமாக இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் செயல்படும் என்.ஜி.ஓக்கள் எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறித்து விசாரிக்க கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், உளவுத்துறை தனது அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசிடம் அளித்தது.
இதில் கிரீன்பீஸ் உள்ளிட்ட பல என்ஜிஓக்கள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக, கறுப்பு பட்டியலில் இடம்பிடித்துள்ளன. மின்சார உற்பத்தி திட்டங்கள், நிலக்கரி, சுரங்கத்தொழில்களில் இந்த என்ஜிஓக்கள் தலையிட்டதால், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.
இந்த அறிக்கை சுட்டிக்காட்டும் அமைப்பில் ஒன்று கிளைமேட் ஒர்க்ஸ். இது கிரீன்பீஸ் அமைப்புக்கு கணிசமாக நிதி உதவி செய்துள்ளது. கிளைமேட் ஒர்க்ஸ் அமைப்பின் இந்திய கிளை அமைப்பான 'சக்தி பவுண்டேசன்' என்ற என்ஜிவோ, இந்த நிதியை கொண்டு, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசுடன் இணைந்து பல திட்டங்களை மேற்கொண்டுள்ளன. இதை சக்தி பவுண்டேசன், அமைப்பின் போர்ட் உறுப்பினர், நிதின் தேசாய் ஒப்புக்கொள்கிறார். மேலும் அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளிடம் இணைந்து மரபுசாரா எரிசக்தி துறையில் அதிக அளவு பணியாற்றியுள்ளோம் என்றார்.
'குளோபல் நாடாளுமன்ற உறுப்பினர் சர்வதேசம்' என்ற அமைப்பிற்கும் கிளைமேட் ஒர்க்ஸ் பவுண்டேசன், நிதி உதவி செய்துவந்துள்ளது. இந்த சர்வதேச அமைப்பில், 80 நாடுகளை சேர்ந்த எம்.பிக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்தவர் தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர்.
கடந்த மாதம் அமைச்சரவையில் இணைந்தபிறகுதான், அப்பதவியை பிரகாஷ் ஜாவேத்கர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 'நாடாளுமன்ற உறுப்பினர் சர்வதேச அமைப்புக்கு', யார் நிதி உதவி செய்தார்கள் என்ற விவரம் தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.