தபோல்கரை படுகொலை செய்த மற்றொரு தீவிரவாதியையும் கண்டுபிடித்தது சிபிஐ
மும்பை: பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரைப் படுகொலை செய்த மற்றொரு இந்துத்துவா தீவிரவாதியையும் சிபிஐ அடையாளம் கண்டறிந்துள்ளது.
2013-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் புனேயில் பகுத்தறிவாளர் தபோல்கர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிந்தனையாளர்கள் பன்சாரோ, கல்புர்க்கி ஆகியோரும் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த வீரேந்திர தாவ்டே என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கி படுகொலைகளில் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தொடர்புடையது அம்பலமானது.
மேலும் 2009-ம் ஆண்டு கோவா குண்டுவெடிப்பு வழக்கிலும் இந்த தீவிரவாத இயக்கத்துக்குத் தொடர்பு இருப்பது உறுதியானது.
தாவ்டேவிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மற்றொரு கூட்டாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.