அஸ்ஸாமிலும் வங்கதேச தீவிரவாதிகள்... என்.ஐ.ஏ விசாரணை வளையம் விரிவடைகிறது!
புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி மேற்கு வங்கத்தைத் தாண்டி தற்போது அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவிலும் தனது விசாரணை வளையத்தை விஸ்தரித்துள்ளது.
புர்த்வான் சம்பவத்திற்குப் பின்னர் பல தீவிரவாதிகள் இந்த இரு மாநிலங்களுக்கும் தப்பிப் போய் விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால்தான் விசாரணை வளையத்தை இந்த இரு மாநிலங்களுக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விஸ்தரித்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு 6 அஸ்ஸாம் இளைஞர்களைப் பிடித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அஸ்ஸாம் தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக இருப்பது தெரிய வந்தது.
தற்போது அஸ்ஸாமில் பதுங்கியிருக்கும், மறைந்திருக்கும், செயல்படும் தீவிரவாதிகள் குறித்த தகவல்களை அஸ்ஸாம் போலீஸாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கும் அவர்கள் கொடுத்து வருகிறார்கள்.
மேலும் குறிப்பிட்ட சில என்ஜிஓக்கள் குறித்து அஸ்ஸாம் போலீஸாரை தேசிய புலனாய்வுப் படை உஷார்படுத்தியுள்ளது. இவர்கள்தான், மேற்கு வங்கத்தில் ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் தீவிரவாத அமைப்புக்கு பல உதவிகளை வழங்கியவர்கள் ஆவர்.
தற்போது அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் 8 என்ஜிஓ அமைப்புகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வங்கதேச தீவிரவாதிகள் மிகவும் திட்டமிட்டு நமது நாட்டுக்குள் ஊடுறுவியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 180 பேர் வரை ஊடுறுவியுள்ளனர். இங்கே வந்த பின்னர் அவர்களை பேட்ச் பேட்ச் ஆக பிரித்துள்ளனர். பிரித்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
முக்கிய மையம் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக பேரபேட்டா என்ற இடத்தை இவர்கள் கிட்டத்தட்ட தலைமைகம் போல வைத்துக் கொண்டுள்ளனர். அதேபோல அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் மற்றவர்களை பிரித்து அனுப்பியுள்ளனர்.
தற்போது அஸ்ஸாமில் 6 பேர் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து அந்த மாநிலம் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் கவனம் திரும்பியுள்ளது. தங்களுக்கு ஜேஎம்பி அமைப்பு பயிற்சி அளித்ததை இவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் முதலில் மேற்கு வங்க மாநிலம் மத்யம் பகுதியில் ஊடுறுவியுள்ளனர். பின்னர் அஸ்ஸாம் போயுள்ளனர். இவர்களை தேவைப்பட்டால் பயன்படுத்த ரிசர்வ் தீவிரவாதிகள் போல வைத்திருந்தனர்.
இவர்கள் தவிர மேலும் பல தீவிரவாதிகள் அஸ்ஸாமில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்களில் பலர் வங்கதேசத்துக்கு திரும்பிப் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த தீவிரவாத அமைப்புக்கு அஸ்ஸாமில் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி.
மேலும் அஸ்ஸாமில் சில உள்ளூர் அரசியல்வாதிகள் நடத்தும் என்.ஜிஓக்களும் கண்காணிக்கப்படுகின்றன.
அஸ்ஸாமில் உள்ள உள்ளூர் தீவிரவாத அமைப்புகள் வங்கதேச தீவிரவாத அமைப்புகளுக்கு நீண்ட காலமாகவே உதவி வருகின்றன. குறிப்பாக ஹரகத் உல் ஜிஹாதி இஸ்லாமி என்ற அமைப்புக்கு அவர்கள் உதவி வருகின்றனர். இதன் மூலம் இந்த அமை்பபு தனது இன்னொரு பிரிவை ஹைதராபாத்தில் அமைக்கவும் வழி கிடைத்தது.
அஸ்ஸாமுக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே தீவிரவாத தொடர்புகள் பல காலமாகவே இருந்து வருகின்றன. இரு மாநிலங்களையும் வங்கதேச தீவிரவாதிகள் பல காலமாக பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் அஸ்ஸாமில் அல் கொய்தா தனது பிரிவை நிறுவ முயன்று வருவதாக அஸ்ஸாம் முதல்வரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே புர்த்வான் சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை வங்கதேசத்துடன் இந்தியா பகிர்ந்து கொள்ளவுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இரு நாட்டு உளவுப் பிரிவுகளும் தொடர்பில் உள்ளன.
முதல் கட்ட விசாரணையின்படி மேற்கு வங்கத்தில் ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் தீவிரவாத அமைப்புக்கு 58 பிரிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கெளசர் உள்ளிட்ட 8 முக்கிய தீவிரவாத தலைவர்களின் விவரங்களையும் இந்தியா வங்கதேசத்திடம் கொடுக்கவுள்ளது. இவர்கள் வங்கதேசத்திற்குத் தப்பியோடி விட்டதாக கருதப்படுகிறது.
மேலும் தீவிரவாதிகளுக்கு எப்படியெல்லாம் நிதி வருகிறது என்ற தகவலையும் இந்தியா, வங்கதேசத்திற்கு அளிக்கிறது.
இது முதல் கட்ட விசாரணைத் தகவல்கள்தான். இறுதி விசாரணை அறிக்கையில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் இடம் பெறலாம் என்று தெரிகிறது.