பர்த்வான் குண்டுவெடிப்பு: அல் உம்மாவுடன் தொடர்புடைய வங்கதேச இஸ்லாமி சாத்ரா சிபிருக்கு தொடர்பு?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் வெடிகுண்டு தொழிற்சாலைகளை இயக்கத்தின் பின்னணியில் தமிழகத்தின் அல் உம்மா அமைப்புடன் தொடர்புடைய வங்கதேசத்தின் இஸ்லாமி சாத்ரா சிபிர் அமைப்பின் பங்கு இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்கத்தின் பர்த்வான் பகுதியில் இம்மாதம் 2-ந் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டை மாநில போலீசார் சீல் வைத்துப் பூட்டினர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக அந்த வீட்டை தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தியதில் ஏராளமான வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையே இயங்கி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதில் முர்சிதாபாத்தில் மட்டும் 43 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டு தயாரிப்பு சம்பவங்களின் பின்னணியில் ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் என்ற அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த அமைப்பு இந்தியாவில் ஊடுருவுவதற்கு இஸ்லாமி சாத்ரா சிபிர் என்ற மாணவர் அமைப்புதான் உதவியிருக்கிறது. இந்த அமைப்பு பெண்களை தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு அனுப்பி வைக்கும் கொள்கை கொண்டது.
இதே இஸ்லாமி சாத்ரா அமைப்பினர் தமிழகத்தில் செயல்பட்ட அல் உம்மா இயக்கத்துடன் நேரடியாக தொடர்பும் வைத்திருந்தது. 2010ஆம் ஆண்டு முதல் இந்த வெடிகுண்டு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர்.
இந்த தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக 180 வங்கதேச நாட்டவர் ஊடுருவியிருக்கின்றனர். இவர்களுக்கு அனிசுர் என்ற உள்ளூர் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல் ஆயத்த ஆடை தொழிற்சாலையை நடத்தி வந்த சகீல் என்பவரும் இப்போது சிக்கியுள்ளார். அவரது தொழிற்சாலையில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் மதராசாக்கள்தான் இத்தகைய தீவிரவாத செயல்களில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.