5.66 கோடி ரூபாய் வருமானம்... மெகா ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மத்திய அரசுக்கு ரூ.5.66 லட்சம் கோடி வருமானம் தரும் என்று கணிக்கப்பட்டுள்ள மெகா ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் இன்று மத்திய கேபினட் அமைச்சர்களின் கூட்டம் நடைப்பெற்றது. இதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மெகா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு 5.66 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, 2300 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் மூலம் சுமார் 64 ஆயிரம் கோடியும், தொலைத்தொடர்பு துறையின் பல்வேறு தீர்வை மற்றும் சேவைகள் மூலம் 98,995 ஆயிரம் கோடி ரூபாயும் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏலத்திற்கான முறையான அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 1-ம் தேதி ஏலம் தொடங்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2014 - 15ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் மத்திய அரசுக்கு 2 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. சீனாவிற்கு அடுத்தபடியாக மொபைல் போனின் சந்தையாக இந்தியா திகழ்கிறது.