7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு மனு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை 3 மாதத்துக்குள் விசாரணை செய்து முடிவுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.
இதைத் தொடர்ந்து இந்த மூவர் மற்றும் ஏற்கெனவே ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேர் என மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
மேலும் இது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்தும் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசுக்கு பதில் தெரிவிக்காமல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போனது.
இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று முடிவடைந்துவிட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் இன்றுடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருந்தது சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் மனுவை 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் 7 கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி அதை ஆராயவும் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற வழக்கை உச்சநீதிமன்றம் இப்போதுதான் எதிர்கொள்கிறது என்றும் இந்த வழக்கின் விசாரணையை 3 மாதத்துக்குள் அரசியல் சாசன பெஞ்ச் முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
வழக்கின் பின்னணி என்ன?
ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தங்களது விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் கருணை மனுவை மூவரும் கொடுத்தனர்.
ஆனால் 11 ஆண்டுகாலம் கழித்து இவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இப்படி தாமதமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தங்களது தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 18-ந் தேதி மூவரது தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அத்துடன் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.
இதனடிப்படையில் இந்த மூன்று பேருடன் ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்தது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இதனால் 7 தமிழர் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்தான் இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி தீர்ப்பளித்துள்ளது.
விடுதலைக்கு எதிரான தடை தொடரும்
அத்துடன் ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.