காவிரி: தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக தொடங்கி வைத்த போராட்டம்- போர்க்களங்காகின மண்டியா, மைசூர்!
மண்டியா: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மண்டியா, பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் இன்றும் தொடருகின்றன. மண்டியா போராட்டத்தில் ஒக்கலிகா கவுடா மடாதிபதி பங்கேற்க இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு மிக மிக குறைவாக வெறும் 5,000 கன அடி நீரை மட்டும் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு ஏற்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. தமிழ்நாடு அரசு, காவிரியில் 24,000 கன அடி நீரை கேட்டு தொடர்ந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து சொட்டு காவிரி நீரைத் தரவே கூடாது என முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது கர்நாடகா பாஜகதான். இதனைத் தொடர்ந்தே கன்னட விவசாயிகள் களத்தில் குதித்தனர். கர்நாடகா அரசியலுக்காக பாஜக பற்ற வைத்த நெருப்பு இன்று விவசாயிகளை வீதியில் இறக்கி விட்டுள்ளது.
மண்டியாவில் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகள் உச்சநீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவைத் தொடர்ந்து உக்கிரமாகி உள்ளனர். மண்டியாவில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மண்டியா, மைசூர், பெங்களூர் நகரங்களில் பல்வேறு கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு கன்னட நடிகர், நடிகைகள் ஆதரவை தர தொடங்கி உள்ளனர்.
மண்டியா போராட்டத்தில் அப்பகுதியில் பெரும்பான்மையினராக இருக்கும் ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி பங்கேற்க உள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பெங்களூர் நகரத்துக்கு குடிநீர் வழங்கக் கூடிய நிலையத்தையும் பொதுப் பணித்துறை அலுவலகங்களையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் கொடும்பாவிகளை கொளுத்தியும் டயர்களையும் எரித்தும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துகின்றனர். பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலை போராட்டங்களால் பதற்றமடைந்திருக்கிறது. கர்நாடக விவசாயிகளுடன் கன்னட ரக்ஷன வேதிகே போன்ற கன்னடர் இன அமைப்புகளும் இணைந்திருப்பதால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளனர். இதனையடுத்து இரு மாநில எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications