புதைக்கப்பட்ட படான் சகோதரிகள் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சிபிஐ முடிவு
படான்: படானில், பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப் பட்ட சகோதரிகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவரும் கடந்த மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இரவு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற இவர்களை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதற்கிடையே சொத்துப் பிரச்சினை எனக் கூறி போலீசார் வழக்கை திசை திருப்ப முயற்சித்ததாக குற்றம் சாட்டப் பட்டது. இதனால் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணையை கையில் எடுத்த சி.பி.ஐ. சம்பவம் நடந்த கிராமத்திற்கு சென்று சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டனர். மேலும், கிராம மக்களிடம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப் பட்டவர்களிடன் உண்மையை கண்டறியும்சோதனை நடத்தப் பட்டது. அப்போது சில கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், சகோதரிகள் படுகொலை கௌரவக் கொலையாக இருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது. எனவே, உண்மை நிலவரத்தை அறிய சிறுமிகளின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.