வேணாம், அழுதுருவேன்.. சிபிஐ நீதிபதியின் கேள்விகளால் எமோஷனலான எதியூரப்பா!
பெங்களூர்: சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணையின்போது கர்நாடக பாஜக தலைவர் எதியூரப்பாவிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி அடுக்கடுக்காக 475 கேள்விகளை சிபிஐ கோர்ட் நீதிபதி கேட்டதால் ஒரு கட்டத்தில் அழுது விட்டார் எதியூரப்பா. அவரால் சரியாக பதில் சொல்லக் கூட முடியவில்லை. குரல் விம்ம அவர் பதிலளித்தார்.
எதியூரப்பா முதல்வராக இருந்தபோது சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்களுக்கு சாதகமாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சுரங்க நிறுவனம் ஒன்று எதியூரப்பா குடும்பத்தினர் நடத்தி வரும் பிரேர்னா டிரஸ்ட்டுக்கு ரூ. 20 கோடி நன்கொடையாக அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக எதியூரப்பா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை சிபிஐ கோர்ட் விசாரித்து வருகிறது. நேற்று எதியூரப்பாவிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. 475 கேள்விகளை அடுத்தடுத்து கேட்டார் நீதிபதி.
இதனால் நிலை தடுமாறிப் போன எதியூரப்பா ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு விட்டார். விம்மிய குரலில் அவர் பதிலளித்தார்.
இந்த வழக்கு குறித்து வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்டபோது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் என்ன செய்திருந்தாலும் அது சட்டத்திற்குட்பட்டுத்தான் செய்தேன். எனது நடவடிக்கையால் அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை என்றார் அவர்.
கடந்த 2008ல் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக முதல் முறையாக தென்னிந்தியாவில் ஆட்சிப் பீடத்தில் ஏறியது. அதற்குக் காரணமானவரான எதியூரப்பா முதல்வரானார். ஆனால் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கத் தொடங்கினார் எதியூரப்பா. உச்சமாக, அவர் மீது கடந்த 2011ல் சட்டவிரோத சுரங்க அனுமதி புகார் எழுந்தது.
அவர் மீது பரபரப்பு புகார்களை சுமத்தியிருந்தார் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. எதியூரப்பா குடும்பத்தினர் நடத்தி வரும் பிரேர்னா அறக்கட்டளைக்கு செளத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் ரூ. 10 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. அதேபோல ராச்செனஹள்ளியில் 1.02 ஏக்கர் நிலத்தை வாங்க ரூ. 20 கோடியைக் கொடுத்துள்ளது. தனது சுய லாபத்திற்காக எதியூரப்பாவிற்கு இந்தத் தொகையை அது லஞ்சமாக வழங்கியதாக சந்தோஷ் ஹெக்டா கூறியிருந்தார். இதை எதியூரப்பா மறுத்தார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி எதியூரப்பா மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. அவரது வீடும் ரெய்டுக்குள்ளானது. முதல்வர் பதவியை விட்டு விலகினார் எதியூரப்பா. பின்னர் அவர் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.