மமதா vs சிபிஐ.. நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறது சிபிஐ.. மேற்கு வங்க ஆளுனரிடமும் முறையிட முடிவு!
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து சிபிஐ இதுகுறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்து இருக்கிறது.
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து சிபிஐ இதுகுறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்து இருக்கிறது.
சிபிஐக்கு மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிய பூதகரமாகி உள்ளது. தற்போது இது தேசிய பிரச்சனையாகவும், மாநில சுயாட்சி உரிமை பிரச்சனையாகவும் மாறியுள்ளது.
இன்று கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது. தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்துள்ளது. சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
தற்போது சிபிஐ மாநில அரசின் அனுமதி இல்லாமல் கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா நடத்தி வருகிறார். அங்கு கொல்கத்தா திரிணாமுல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய சிபிஐ அமைப்பு இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்து இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து நாளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு சிபிஐ செய்ய முடிவு செய்துள்ளது.
நாளை இதற்காக வழக்கு தொடுக்கப்படும் என்று சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் இது தொடர்பாக சிபிஐ மேற்கு வங்க ஆளுநரை சந்திக்கவும் சிபிஐ முடிவு செய்து இருக்கிறது. இதற்காக நாளை நேரமும் கேட்டு இருக்கிறது. நாளையே ஆளுநர் சிபிஐக்கு நேரம் வழங்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.