மாநிலம் மாறினாலும் அதே செல் எண், ஆனால் வேறு நிறுவனம்.. வருகிறது புதிய "போர்ட்டபிலிட்டி"
டெல்லி: செல்போன் வாடிக்கையாளர்கள் மாநிலத்துக்கு மாநிலம் செல்போன் நம்பரை மாற்றாமல் வேறு நிறுவனத்துக்கு மாறலாம் என்ற வசதி நாளை மறுநாள் முதல் அமலுக்கு வர உள்ளது.
செல்போன் சந்தாதாரர்கள் தற்போது ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்துக்கு மாறும் வசதி உள்ளது. செல்போன் நிறுவனத்தின் சேவை குறைபாடு அல்லது போதிய டவர் கிடைக்காததால் இடையூறு ஏற்படுதல் போன்ற காரணங்களால் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.

அந்தந்த மாநிலத்துக்குள்ளே மட்டும் வேறு நிறுவனத்துக்கு மாறலாம். இனி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் உள்ள செல்போன் நிறுவனத்துக்கோ அல்லது ஒரு வட்டாரத்தில் இருந்து மற்றொரு வட்டாரத்துக்கு நம்பரை மாற்றாமலே மாறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வருகிற 3 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் இந்த புதிய வசதி அமலுக்கு வருகிறது. எனவே இனி சந்தாதாரர்கள் நம்பரை மாற்றாமலேயே தாங்கள் விரும்பும் செல்போன் நிறுவனத்துக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் டெலிகாம் ஆணையம் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவர் ராஜேஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
இப்போது இருக்கும் நிறுவனத்தில் இருந்து வேறொரு செல்போன் நிறுவனத்துக்கு மாற விரும்பும் சந்தாதாரர்கள் "போர்ட்" என ஆங்கிலத்தில் டைப் செய்து அதனுடன் சந்தாதாரரின் எண்ணையும் டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் உடனே ரகசிய எண்கள் கொண்ட பதில் எஸ்.எம்.எஸ். வரும். அந்த ரகசிய எண்ணை நீங்கள் விரும்பும் செல்போன் நிறுவனத்துக்கு தெரிவித்து 7 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளும் வசதி அமல்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications