காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கவும் முடிவு செய்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தை முறைப்படுத்தும் திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
முறைப்படுத்தும் திட்டம் என்பது எதுவாக வேணாலும் இருக்கலாம். அதாவது மத்திய அரசு நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாம் அல்லது காவிரி நீர் முறைப்படுத்தும் குழு என எது வேணாலும் அமைக்கலாம் என்பதுதான் இதன் சாராம்சம்.
கெடு 29-இல் முடிவு
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிடும்.
காவிரியில் இருந்து தண்ணீர்
இதுதொடர்பாக நீர் வளத் துறை அமைச்சகம் ஒரு வரைவை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. அதில் காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க கோரியுள்ளது. மேலும் காவிரி நீரை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பதை மேற்பார்வையிட ஒரு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதில் மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை எங்கும் இல்லை. இதை தவிர அரசுக்கு வேறு வழி இல்லை என்று கூறப்படுகிறது.
4 பேர் பகுதி நேரம்
எனவே காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்கவும் இதற்கு 9 பேரை உறுப்பினர்களாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த குழுவில் தலைவர் உள்பட 5 பேர் முழு நேர உறுப்பினர்களாகவும், மீதமுள்ள 4 பேர் 4 மாநிலங்களில் இருந்தும் பகுதி நேரமாக நியமிக்கப்படுவர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், காவிரி மேற்பார்வை ஆணையத்தை 29-ஆம் தேதிக்குள் அமைப்பது என்பது சாத்தியம் இல்லை. காலக்கெடுவுக்குள் மேற்பார்வை ஆணையத்தை அமைக்காவிட்டால் எதுவும் மாறிவிடாது என்கிறார்.
மார்ச் 31-ஆம் தேதி
ஒரு வேளை மார்ச் 29-ஆம் தேதிக்குள் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மார்ச் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 30-ஆம் தேதி புனிதவெள்ளி என்பதால் நீதிமன்றத்துக்கு விடுமுறை, எனவே மார்ச் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடலாம் என தெரிகிறது.