கூட்டணியில் இருந்தாலும் குடைச்சல் கொடுத்த சந்திரபாபுநாயுடு... ரூ.1269 கோடி நிதியை பெற்று சாதித்தார்!
பாஜக கூட்டணியில் இருந்தாலும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி கேட்டு போராடியதற்கான பலன் அவர்களின் கைமேல் கிடைத்துள்ளது.
டெல்லி : பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி கேட்டு குடைச்சல் கொடுத்து வந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. தொடர் எதிர்ப்புகளையடுத்து ரூ.1,269 கோடியை மத்திய அரசு ஆந்திராவிற்கென தனியாக ஒதுக்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி கோரிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தது. ஆனால் பிரதமர் உறுதியளித்தபடி ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தும் கிடைக்கவில்லை, புதிய தலைநகரான அமராவதிக்கு சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு சிறப்பு நிதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதிலும் ஏமாற்றமே கிடைத்ததால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியடைந்தார். இதனால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி விலகுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது.

சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு
பட்ஜெட் வெளியானவுடன் எம்பிகள் கூட்டத்தை கூட்டி சந்திரபாபு நாயுடு அவசரமாக விவாதித்தார். இதன் முடிவில் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்ட திட்டமிடப்பட்டது. இதன் விளைவாக கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநில எம்பிகள் கடும் அமளியை ஏற்படுத்தினர். நாடாளுமன்றத்திற்கு வெளிளே நூதன போராட்டங்களையும் நடத்தினர்.

பணிந்த மத்தய அரசு
இந்நிலையில் ஆந்திராவின் மிரட்டல்களுக்கு கட்டுப்பட்டு மத்திய அரசு ரூ.1269 கோடி நிதியைஒதுக்கியுள்ளது. போலாவரம் பன்நோக்கு திட்டத்துக்காக ரூ. 417.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று அங்கன்வாடி சேவை திட்டத்துக்கு ரூ. 196.92 கோடி, உள்ளாட்சி நிர்வாகங்களின் மானியமாக ரூ.253.74 கோடி என மொத்தம் ரூ.1,269 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக்கு பாதிப்பு இருக்காது
தெலுங்குதேசம், பாஜக உறவை முறித்துக் கொள்வது குறித்து ஓரிரு நாளில் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முடிவு செய்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவை சமாதானம் செய்யும் விதமாக சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

கூட்டணி வேறு என்று சாதித்த சந்திரபாபு
தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு நிதி வேண்டும் என்று முதல்வர் , எம்பிகள் என அனைவரும் ஒருமித்த குரலில் போராடி அதில் சாதித்தும் காட்டியுள்ளது ஆந்திரா. கூட்டணி வேறு, மாநில வளர்ச்சி வேறு என்பதை இதன் மூலம் தெலுங்குதேசம் கட்சி உணர்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications