மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியில் இருந்து நீதிபதி கங்குலி நீக்கம்? ஜனாதிபதி பரிசீலனை
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பெண் வழக்கறிஞர் அளித்த பாலியல் புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக, 3 நீதிபதிகள் விசாரணைக்குழு அறிவித்து இருந்தது.
அதைத்தொடர்ந்து அவர் தற்போது வகித்துவரும் மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நிர்பந்தம் அதிகரித்து வருகிறது. ஆனால், குற்றச்சாட்டை மறுத்துவரும் நீதிபதி கங்குலி பதவி விலக பிடிவாதமாக மறுத்து வருகிறார்.
இதனிடையே, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நீதிபதி கங்குலி மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே இரண்டு கடிதங்களை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிக்கு எழுதி உள்ளார். இந்த கடிதங்கள் மீது மத்திய அரசின் கருத்தை அறிவதற்காக உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பி வைத்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த பிரச்னையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்து சட்ட அமைச்சகத்தின் கருத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
நீதிபதி கங்குலிக்கு எதிராக டெல்லி காவல்துறையில் குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது அல்லது மீண்டும் புதிதாக உச்சச நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.