குழந்தைகள் மீதான பலாத்காரத்துக்கு ஆண்மை நீக்க தண்டனை? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தல்
டெல்லி: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் என்பவை மூர்க்கமான மனப்பிறழ்ச்சிதான்; இதற்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் நாடாளுமன்றம் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் ஆண்மையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அனிதா பாப்னா உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாலட்சுமி பவானி, கொடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். இத்தகைய கொடுமையான குற்றங்களுக்கு அப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.
ஆனால் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கியோ, பாலியல் வன்முறை குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாதுதான். அதே நேரத்தில் ஆண்மை நீக்கம் போன்ற தண்டனைகளை நீதிமன்றம் பரிந்துரைக்க முடியாது. அதுமட்டுமின்றி அவை ஏற்க முடியாததும் கூட... இத்தகைய குற்றங்களைத் தடுக்க உரிய தண்டனை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில்தான் சட்டம் இயற்றுவது அல்லது சட்ட திருத்தங்களை மேற்கொள்வது என்பதுதான் சரியான வழி என்றார்.
இந்த வாதங்களைத் தொடர்ந்து நீதிபதிகள் தெரிவித்த கருத்து:
உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டங்களை இயற்றிவிட முடியாது. இத்தகைய சட்டங்கள் அல்லது சட்ட திருத்தங்களை இயற்றும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் உள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் என்பவை மூர்க்கத்தனமான மனப்பிறழ்ச்சியைத் தவிர வேறு எதுவுமே இல்லை. பாலுறவு, பலாத்காரம் என்பதையே அறியாத 10 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் வலியும் வேதனையும் சகிக்க முடியாதது. இத்தகைய வக்கிரமான காரியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
இத்தகைய கொடுங் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும். பாலியல் குற்றங்களின் அடிப்படையில் குழந்தை என்பதற்கான சரியான விளக்கத்தையும் சட்டத்தில் விவரிக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டத்திலும் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும். இது நீதிமன்றத்தின் கருத்து மட்டுமே.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.