கேள்விக்குறியாகும் கடலோரப் பாதுகாப்பு- 75 துறைமுகங்களில் சுத்தமாக பாதுகாப்பே இல்லையாம்!
டெல்லி: இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு முழுமையாக உள்ளது என்று கூற முடியாத துரதிர்ஷ்ட நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது இந்தியாவின் 75 துறைமுகங்களில் பாதுகாப்பு என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாம்.
26/11 தாக்குதலுக்குப் பிறகும் கூட இந்தியா பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. மாறாக தீவிரவாதிகள் மிகவும் சுலபமாக இந்தியாவுக்குள் ஊடுருவ நாமே நிறைய வாய்ப்புகளை இன்னும் ஏற்படுத்தி வைத்துக் காத்திருக்கிறோம் என்றே தெரிகிறது.
மும்பைக்குள் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சாவகாசமாக ஊடுறுவி கொலைவெறியாட்டம் போட்ட சம்பவம் மக்கள் மனதிலிருந்து இன்னும் விலகவில்லை. இதுகுறித்து நிறைய பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது, வாதம் புரியப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பை நாம் இன்னும் 100 சதவீதம் மேம்படுத்தவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.
12 துறைமுகங்களில் பாதுகாப்பு:
இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் பாதுகாப்பு பலமாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் 12 முக்கியத் துறைமுகங்கள் உள்ளன. இவை பெரியவை. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கண்டுகொள்ளப்படாத சிறு துறைமுகங்கள்:
ஆனால் சிறு துறைமுகங்கள்தான் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. மொத்தம் 75 சிறு துறைமுகங்கள் இந்தியாவில் உள்ளன. இவற்றில் பாதுகாப்பு மகா மோசமாக உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், கேரளா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இந்த துறைமுகங்கள் உள்ளன.
குஜராத்தான் முதலிடத்தில்:
இதில் அதிக அளவில் குஜராத்தில் 21 துறைமுகங்கள் உள்ளனவாம். இங்கு பாதுகாப்பு சுத்தமாக இல்லை என்று உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவில் 45 துறைமுகங்கள் இயங்காத நிலையில் உள்லன. இவை ஜெட்டிகளுக்கான லேன்டிங் பாயிண்டுகளாக உள்ளன. இங்கு செயல்பாடுகள் குறைவுதான். அதேசமயம், சுத்தமாக பாதுகாப்பே இல்லாமல் இவற்றை விட முடியாது என்ற நிலை உள்ளது.
அடிப்படை செக்யூரிட்டி கூட இல்லை:
அடிப்படை பாதுகாப்பே இல்லாமல் பல கடலோரப் பகுதிகள் உள்ளன. குறிப்பாக சிறிய துறைமுகங்களில் ஸ்கேனர்கள், சிசிடிவிகள், ஆவணப் பராமரிப்பு என எதுவுமே இல்லையாம். சில பெரிய துறைமுகங்களிலும் கூட இதில் குறைபாடு உள்ளதாம்.
காற்றில் பறக்கும் விதிகள்:
ஒரு முக்கியமான துறை முகத்தில் ஊழியர்களை பரிசோதிக்காமலேயே உள்ளே அனுப்புகிறார்களாம். அவர்கள் ஸ்கேன் செய்யப்படாமல் உள்ளே செல்லும் நிலைமை உள்ளதாம். ஊழியர்களாகவே இருந்தாலும் கூட அவர்களையும் ஸ்கேன் செய்தே அனுப்ப வேண்டும் என்பது விதியாகும். ஆனால் அது இங்கு காற்றில் பறக்க விடப்படுகிறதாம்.
சர்வசாதாரணமாக ஸ்மக்ளிங்:
இந்தியாவைப் பொறுத்தவரை குஜராத், மகாராஷ்டிராவில்தான் கடலோரப் பாதுகாப்பு சற்று குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியப் பிரச்சினைக்குரிய பகுதியும் இவைதான். இங்கு கடத்தல் சர்வ சாதாரணமாக நடக்கிறது. கடல் மார்க்கமாக கடத்தல்காரர்கள் படு சுலபமாக சென்று வருகிறார்களாம். இதுகுறித்தும் உளவுத்துறை தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளதாம்.