காஷ்மீரில் பயங்கர குளிர்... உறைநிலைக்குக் கீழே போனது வெப்பநிலை!
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடும் குளிர் வாட்டியெடுக்கிறது. லே, லடாக் பகுதிகளில் குறைந்தபட்ச தட்பவெப்பநிலை உறைநிலைக்கும் கீழே சென்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடும் குளிர் காணப்படுகிறது. லே, லடாக் பகுதிகளில் குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை உறைநிலைக்கும் கீழே சென்று, மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது.
இமாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் பனிப்பொழிவு மிக, மிக கடுமையாக உள்ளது. அங்கு பகலிலும் மைனஸ் 4.6 டிகிரி செல்சியஸ் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சி, வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இது குறித்து அம்மாநில வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமையன்று பள்ளத் தாக்கு பகுதி முழுவதும் குறைந்தபட்ச தட்ப வெப்பநிலை உறைநிலைக்கும் (ஜீரோ டிகிரி) கீழே சென்று விட்டது. அடுத்த மூன்று நான்கு நாட்களுக்கு இரவில் மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம். இந்தநாட்களில் வானிலை வறட்சியாக இருக்கும். தெளிவான வானிலை காரணமாக குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை மேலும் சரியும்" என்றார்.
டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரையிலான 40 நாட்களில் ஜம்மு காஷ்மீரில் மிகக் கடுமையான குளிர்காலம். இக்காலகட்டத்தில் ஏரிகள், ஓடைகள், நதிகள் அனைத்தும் உறைந்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.