"என்னை விமர்சிக்க காங்கிரஸ் தலைவர்கள் இடையே போட்டா போட்டி".. குஜராத் பிரசாரத்தில் மோடி அட்டாக்!
அகமதாபாத்: என்னை யார் அதிகம் திட்டுகிறார்கள் என்ற போட்டியே காங்கிரஸ் தலைவர்கள் இடையே நடப்பதாகவும்.. எங்கள் மீது நீங்கள் எந்த அளவுக்கு சேற்றை வீசுகிறீர்களோ அந்த அளவுக்கு தாமரை வளரும் என்றும் அகமதாபாத்தில் பிரதமர் மொடி பேசினார்.
குஜராத்தில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இதற்கிடையே 2-ம் கட்ட தேர்தலுக்காக குஜராத்தில் மற்றொரு புறம் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, எனக்கு எதிராக அதிகப்படியான அவதூறு வார்த்தைகளை யார் பேசுகிறார்கள் என்பதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இடையே பெரும் போட்டியே நடப்பதாக பிரதமர் மோடி கேலியாக விமர்சித்துள்ளார். பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ
எனக்கு எதிராக எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ அந்த அளவுக்கு தாமரை அதிகம் மலரும். நான் இந்த மண்ணின் மைந்தன். குஜராத் எனக்கு கொடுத்த நற்பண்புகள் மற்றும் அதிகாரத்தை கண்டு காங்கிரஸ் கட்சி கலக்கம் அடைந்துள்ளது. மொபைல் உலகத்தில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று 2014-க்கு முன்பு யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள். டெல்லிக்கு நீங்கள் என்னை அனுப்பிய போது இந்தியாவில் 2 மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன" என்றார்.

ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை
தனக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மிகவும் மோசமான விமர்சனங்கள் முன் வைப்பதாக விமர்சித்த பிரதமர் மோடி, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து அவர்கள் செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு குடும்பம் மீதுதான் நம்பிக்கை உள்ளது. ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை. அந்த குடும்பத்தை திருப்திப் படுத்த என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். அவர்களை பொருத்தவரை குடும்பம்தான் எல்லாம். ஜனநாயம் கிடையாது" என்றார்.

குடும்பத்திற்காக நீங்கள் வாழ்வது..
மெலும் அவர் கூறுகையில், எனக்கு எதிராக அதிக அவதூறு வார்த்தைகளை யார் பயன்படுத்துவது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் இடையே பெரும் போட்டியே நடக்கிறது. கடவுள் ராமர் இருப்பதையே கேள்விக்கு உள்ளாக்கியவர்கள் இன்று ராமாயணத்தில் இருந்து ராவணணை எடுத்து வந்து விமர்சிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள நண்பர்கள் இதை கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு குடும்பத்திற்காக நீங்கள் வாழ்வது என்பது உங்கள் விருப்பம். ஆனால், ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.

என்னை பார்த்து வாக்களியுங்கள்
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மல்லிகார்ஜூன் கார்கே கூறும் போது, "பிரதமர் மோடி தனது பணிகளை எல்லாம் மறந்து விட்டார். தொடர்ந்து அவர்கள் தேர்தல்களுக்காக பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார். தனது தேர்தல் பிரசாரத்தில் எப்போதும், என்னை பார்த்து வாக்களியுங்கள்.. வேறு எதையும் பார்க்க வேண்டாம் என்று கூறுகிறார்.

பாஜக பதிலடி
எத்தனை முறைதான் உங்கள் முகத்தை நாங்கள் பார்ப்பது? எத்தனை வடிவங்கள் உங்களுக்கு இருக்கிறது? ராவணனைப்போல உங்களுக்கு என்ன 100 தலைகள் இருக்கிறதா?" என்று பேசியிருந்தார். மல்லிகார்ஜூன் கார்கேவின் இந்த கருத்துக்கு பாஜக உடனடியாக பதிலடியும் கொடுத்து இருந்தது.












Click it and Unblock the Notifications