"புருவ புயல்" பிரியா வாரியருக்கு எதிராக புகார்... இஸ்லாமிய அமைப்பு ஹைதராபாத்தில் மனு!
ஒரே ஒரு புருவ டான்சில் உலகையே கட்டிப்போட்ட இணையதள புயல் பிரியா வாரியருக்கு எதிராக ஹைதராபாத் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஹைதராபாத்: 2 நிமிடங்கள் மட்டுமே வரும் புருவ அசைவுகளை வைத்து உலகையே கட்டிப்போட்டுள்ள மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக ஹைதராபாத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.
நேற்று முன் தினம் வெளியான ஒரு அடர் லவ் படத்தின் டீசர் காட்சிகள் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை இன்டர்நெட் புயலாக மாற்றியது. ஒரே நாள் இரவில் சமூக வலைதளங்களில் பிரியா வாரியரை பின்தொடர்வோர் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது.
காதலர் தின கொண்டாட்டத்தில் இளசுகள் இந்த வாரம் முழுக்க மூழ்கி இருக்க அவர்களுக்கு ஏற்றாற் போல புருவ அசைவில் காதல் சொல்லும் பிரியா வாரியரின் ஷார்ப் கண்கள் இளைஞர்களை கட்டிப் போட்டது. ஜிமிக்கிக் கம்மல் ஷெரில் போல இணையதள புரட்சியில் பிரியா வாரியர் சன்னி லியோனையே தோற்கடித்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

திகைத்துப் போன பிரியா வாரியர்
படத்தின் டீசலைப் போல படத்தையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பிரியா வாரியர் தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். என் மீது இவ்வளவு பாசமா என்று பிரியாவே நெகிழ்ந்து போகும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளமே திரண்டு விட்டது.

தொடங்கிடுச்சு பிரச்னை
சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே பிரியா மேனியாவாக இருக்கிறது. இந்த பிரியா மேனியா தற்போது மதப்பிரச்னையாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.

ஹைதராபாத்தில் புகார்
பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் ஹைதராபாத்தின் ஃபலுக்நுமா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்யா மலரய்ய பூவி பாடலின் வரிகளில் புனித நகராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம்பெற்றுள்ளது.

உணர்வுகளை புண்படுத்தும் வரிகள்
இந்த வரிகள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் இந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர் மற்றும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர்களின் மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications