மீனவர்களை சுட்டுக் கொல்வோம்: ரணிலின் 'கொலவெறி' பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு!
டெல்லி: தங்களுடைய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்தால் தமிழக மீனவர்களை சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு அதிகாரம் உள்ளது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பேசியதற்கு நாடாளுமன்ற இரு சபைகளிலும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்துக்கு முன்பு ஒரு பேட்டியில், எங்களுடைய கடல்பகுதிக்குள் அத்துமீறி யார் நுழைந்தாலும் அவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருந்தார்.
மோடியின் பயணத்துக்குப் பிறகும், இதே கருத்தை மீண்டும் ரணில் கூறினார். ரணில் விக்ரமசிங்கேயின் இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மோடியின் பயணம் குறித்த அறிக்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். அப்போது லோக்சபா துணைத் தலைவரும் அண்ணா தி.மு.க. எம்.பி.யுமான மு. தம்பிதுரை எழுந்து, பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஒரு பேட்டியில், எங்கள் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம். இதற்கு எங்களது கடற்படைக்கு அதிகாரம் உள்ளதுÓ என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசியுள்ளார். இரு நாட்களுக்கு முன்பும் இதுபோன்று அவர் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சை, மத்திய அரசு மிகப் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக சபையில் விவாதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்து பேசினர். அப்போது, சுஷ்மா சுவராஜ் குறுக்கிட்டு, மீனவர் பிரச்னை குறித்து இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி விரிவாக பேசினார். மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறினார். இது மிகவும் சிக்கலானது. மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், மனிதாபிமான அடிப்படையில் இரு நாடுகளின் சார்பில் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இலங்கை பிரதமரின் பேச்சு குறித்து சபையில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்றார் சுஷ்மா.
முன்னதாக மோடியின் இலங்கை பயணம் குறித்து சுஷ்மா இந்தியில் அறிக்கை சமர்ப்பித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, ஆங்கிலத்தில் விளக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்படி என்றால்தான் தென்னிந்திய எம்.பி.க்கள் எளிதாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றார்.
அதற்கு சுஷ்மா சம்மதித்து ஆங்கிலத்தில் பேசினார். அதேபோல் ராஜ்யசபாவிலும் இந்தப் பிரச்னை நேற்று எழுப்பப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர் ராஜிவ் சுக்லா பேசுகையில், வெளியுறவுத் துறை அமைச்சர் இந்த சபையில் தவறான தகவலை அளித்துள்ளார். மீனவர்கள் பிரச்னையில் சுமுகமாக தீர்வு காணப்படும் என்றும், பிரதமர் மோடியின் பயணத்தின்போது இது குறித்து விவாதிக்கப்படும் என்றார். ஆனால் இலங்கை பிரதமர் எச்சரிக்கை விடுப்பதுபோல் மீண்டும் பேசியுள்ளார். இதில் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை தாக்கல் செய்வார். அப்போது இது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.