பாஜகவிற்கு சாதகமாகும் சூழ்நிலை.. கோவாவில் மெகா கூட்டணி அமைவதில் குழப்பம்.. எதிர்கட்சிகள் திணறல்
பனாஜி: கோவா சட்டசபைத் தேர்தலில் பெரிய அளவில் கூட்டணிகள் அமையாததால், பா.ஜ.க-வுக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பஞ்சாபை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இந்த நிலையில் கோவாவில் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
கோவா தேர்தல்: இலவச மின்சாரம், குடிநீர்- பெண்களுக்கு ரூ1,000.. ஆம் ஆத்மி அமர்க்கள வாக்குறுதி
கோவா
கோவாவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெல்ல வாய்ப்பிருப்பதாக டைம்ஸ் நவ்- வீட்டோ கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆனால் பாஜக-வில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை நடந்து வருகிறது. கோவாவிலும் பாஜக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில் அம்மாநில தேர்தல் சூடுபிடித்துள்ளது.
பா.ஜ.க
பாஜக முதல்வர் பிரமோத் சவாந்திற்கு புதிய தலைவலியாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் கோவா முதல்வருமான மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால், கோவா தலைநகர் பனாஜி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவருக்கு பாஜக சீட் கொடுக்காவிட்டால், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கூட்டணி
பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா இணைந்து மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரிய கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும் என மற்ற கட்சிகள் இதற்குத் தயாராகி வந்தன. ஆனால் இதுவரை இதில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் விடுத்த அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
வெற்றி வாய்ப்பு
ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. எனவே அங்கு கூட்டணி எதுவும் பெரிதாக முடிவாகவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உரிய கூட்டணி கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறது. இதனால் பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திரிணாமுல்
திரிணாமுல் காங்கிரஸ், ஒரு மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருக்கிறது. அதனால், திரிணாமுல் கட்சியின் கூட்டணி அழைப்பை நிராகரித்துள்ளது. இதனால் பாஜக-வின் வெற்றி எளிதாகிவிட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.