ராமர் கோயில், பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு.. காங். தலைவர் சங்கர்சிங் வகேலா பேச்சால் பரபரப்பு!
குஜராத் சட்டசபையில் முதல்வர் பதவியில் இருந்து விலகும் நரேந்திர மோடிக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா பேசியதாவது:
நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிற மோடியை நான் எனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றிருக்கிறேன்.
1984ஆம் ஆண்டு 2 இடங்களைத்தான் பாஜக பெற்றிருந்தது. இப்போது 282 இடங்களை பாஜக பெற்றுள்ளதற்கு காரணம் நரேந்திர மோடிதான்.
நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்துள்ளனர். அதனால் பாஜகவின் பிரதமராக இல்லாமல் நாட்டின் பிரதமராக மோடி செயல்பட வேண்டும்.
நாட்டின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் துணை கலெக்டராக இருந்தார். அப்போது கலவரம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு அவர் மீது பழிபோடப்பட்டது. அதன் பின்னர் அவர் நாட்டின் பிரதமரானார்.
அதைப் போல 2002 குஜராத் கலவரத்தின் போதும் நரேந்திர மோடி மீது தவறாக குற்றம்சாட்டப்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொதுசிவில் சட்டம் போன்றவற்றை அரசியல் சாசனத்துக்குட்பட்டு நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்
இவ்வாறு சங்கர்சிங் வகேலா பேசினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுவது போன்றவை பாஜகவின் அடிப்படை கொள்கைகள். அதை மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் குஜராத் சட்டசபையிலேயே ஆதரித்துப் பேசியிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காங்கிரஸுக்கு தாவுவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பாஜகவிலும் தீவிரமாக செயல்பட்டவர் சங்கர்சிங் வகேலா என்பதும் குறிப்பிடத்தக்கது.