பேஸ்புக் தலைமையகத்துக்கு சென்ற ஒரே பிரதமர் மோடிதான்- அனாலிட்டிக்கா விவகாரத்தில் காங் குற்றச்சாட்டு
பேஸ்புக் தலைமையகத்துக்கு சென்ற ஒரே பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி: சிலிக்கான் சிட்டியில் உள்ள பேஸ்புக் தலைமையகத்துக்கு சென்ற ஒரே பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் உலகம் முழுவதும் தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனைகளை வழங்கிவந்தது. பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான இந்த நிறுவனம் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் விவரங்களை திருடியது தெரியவந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு வெளியான சில மணி நேரங்களில் காங்கிரஸ் தனது பதிலடியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் தகவல்களை ஆய்வு செய்யும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவுடன் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. சிலிக்கான் சிட்டியில் உள்ள பேஸ்புக் தலைமையகத்துக்கு சென்ற ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான்.
அங்கு சென்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் புதியவைகளை புகுத்துவதில் சிறந்தவர் என்று தலைமையகத்தில் பாராட்டிய பிரதமர் இந்தியா வந்தவுடன் அவரை வில்லனாக சித்தரிக்க முயற்சிக்கிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு பாஜகவும் ஜேடியூவும் அந்த நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்றது.
இந்திய தேசிய காங்கிரஸும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதுவரை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் சேவைகளை பயன்படுத்தியது இல்லை. எனவே மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுவது பொய் என்று சுர்ஜேவாலா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications