பெங்களூரில் பாஜகவுக்கு பெரும் ஷாக்.. ஆர்ஆர்நகர் இடைத் தேர்தலில் காங். அமோக வெற்றி
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் முதல் ரவுண்ட் முதல், காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
Recommended Video
பெங்களூர் நகரிலுள்ள, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் நடைபெற்ற, இடைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அபார வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரிலுள்ள ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதால், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவில்லை.
இதில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு கடந்த திங்கள்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மஜத இணைந்து கூட்டணி அமைத்திருந்தாலும் கூட, ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில், காங்கிரஸ், மஜத தனித்தனியாக களமிறங்கின. பாஜகவுடன் சேர்த்து அங்கு மும்முனை போட்டி நிலவியது.
ஆரம்பம் முதலே முன்னிலை
இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல், காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான, முனிரத்னா முன்னிலை வகித்து வந்தார். முதல் சுற்றில், முனிரத்னா, 9342 வாக்குகளும், பாஜக வேட்பாளர் முனிராஜு கவுடா 4122 வாக்குககளும், மஜத வேட்பாளர் ராமச்சந்திரா 1539 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் இறங்கியிருந்தனர்.
எடியூரப்பா பிரச்சாரம்
6வது சுற்று முடிவில் காங்கிரஸ் 52,285 வாக்குகள், பாஜக 20,858, மஜத 10,123 வாக்குகள் பெற்றிருந்தன. இதனால் காங்கிரஸ் வெற்றி ஏறத்தாழ அப்போதே உறுதியாகிவிட்டது. 16 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 1,08, 064 வாக்குகள், பாஜக வேட்பாளர் 82,572, மஜத வேட்பாளர் 60,360 வாக்குகள் பெற்றனர். இதனால், காங். வேட்பாளர் முனிரத்னா 25492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளருக்காக சித்தராமையா பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் பாஜக வேட்பாளருக்காக எடியூரப்பாவும், மஜத வேட்பாளருக்காக தேவகவுடாவும் பிரச்சாரம் செய்தனர்.
காங்கிரஸ் பலம்
மஜதவும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் அந்த கட்சி வாக்குகளும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளாகவே பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 78 இடங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால், ஜமகண்டி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காங்கிரசின், சித்துநியாமகவுடா (63), சில தினங்கள் முன்பாக நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார்.
ஜெயநகர் தேர்தல்
எனவே, 77ஆக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் குறைந்திருந்தது. ராஜராஜேஸ்வரி நகர் வெற்றியின் மூலம் மீண்டும் காங்கிரஸ் 78 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.