காங்கிரசின் 50% சதவீத வேட்பாளர்கள் 35 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும்-ப.சி
டெல்லி: இந்த நாட்டைத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல மக்கள் காங்கிரஸுக்கே மீண்டும் உரிமை தருவார்கள், உத்தரவிடுவார்கள். எனக்கு அதில் பரிபூரண நம்பிககை உள்ளது. எனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டமிடலை காங்கிரஸ் இன்றே தொடங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், 10 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் கூடி நமது வெற்றியைக் கொண்டாடியதை அனைவரும் சற்று திரும்பிப் பாருங்கள். அன்று நாம் எதிர்காலம் குறித்த திட்டங்களையும் தீட்டினோம்.
அதேபோல அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்களை நாம் தீட்ட தொடங்கலாம். அதற்கான கூட்டமாக இதை எடுத்துக் கொள்ளுங்கள். ஆம், அபரிமிதமான நம்பிக்கையுடன் நான் கூறுகிறேன், மீண்டும் காங்கிரஸிடமே நாட்டைத் தலைமை தாங்கும் உத்தரவை மக்கள் வரும் தேர்தலில் தரப் போகிறார்கள். அதை நான் பரிபூரணமாக நம்புகிறேன்.
நாம் ஏழ்மையை வெல்ல வேண்டும், கல்லாமையை வெல்ல வேண்டும், பசி பட்டினியை வெல்ல வேண்டும்.
நாட்டில் பல கட்சிகள் வந்து போய்விட்டன.. கல் மாதிரி நிற்பது காங்கிரஸ் மட்டுமே. சிறுபான்மையினர் நலன், சமூக நீதியை நிலைநாட்டியது காங்கிரஸ் மட்டுமே. இந்தியாவின் சரித்திரம் காங்கிரசுடன் பின்னிப் பிணைந்தது.
சுதந்திரமான, ஜனநாயக இந்தியாவை கட்டியெழுப்புவதே நமது நோக்கமாகும். நாம் வளர்வது மட்டும் முக்கியமல்ல, மாறாக இந்த வளர்ச்சியானது உள்ளடங்கிய வளர்ச்சிக்கும் வி்த்திடுவது அவசியம்.
நமது நோக்கம், இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சமூ்க நீதியைப் பெற வேண்டும்.
5-10 வருடங்களில் நமது பணிகள் முடிய வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. மாறாக வாழ்நாள் முழுவதும் இ்ந்த நாட்டுக்காக உழைக்க வேண்டும். அதுதான் நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டை ஆண்ட எந்த அரசாவது இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை சாதித்துள்ளதா என்று இதற்கு முன்பு ஆண்டவர்களிடம் போய்க் கேளுங்கள். எந்த ஒரு அரசும் இப்படிப்பட்ட சாதனை வளர்ச்சியை நமது நாட்டில் இதுவரை பதிவு செய்ததே இல்லை. இதுதான் உண்மையான வளர்ச்சி.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் 50% சதவீத வேட்பாளர்கள் 35 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.