நிலம் கையக மசோதா விவகாரத்தில் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது..பா.ஜ.க.வுக்கு சவால் விடும் ராகுல்..
ராஜஸ்தான் : மத்திய பாஜக அரசின் நிலம் கையகச் சட்டத் திருத்த மசோதாவை ஒரு அடி கூட முன்னெடுத்துச் செல்ல விடமாட்டோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, நேற்று அம்மாநிலத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராகுல் காந்தியுடன் சென்றனர்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது...
மத்திய பிரதேச தேர்வு வாரிய முறைகேடு, ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்புடைய லலித் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவிய விவகாரம், மகாரஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டே மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையக அவசரச் சட்டம் என மத்திய, மாநில பாஜக அரசு மீது பல்வேறு புகார்கள் வெளிவருகின்றன.
இவ்வளவு ஊழல்கள், முறைகேடுகள் பாஜக ஆட்சியில் வெளிவரும் என்பதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. லஞ்சம் வாங்கவும் மாட்டேன்.. வாங்க அனுமதிக்கவும் மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.
ஆனால், ஊழல் நடைபெற்றால், அதைப் பற்றி பேசவும் மாட்டேன் என்று அவர் கூறவில்லையே. பிறகு ஏன் இந்த விவகாரங்களில் அவர் மௌனம் காத்து வருகிறார்? ராஜஸ்தான் முதல்வரின் ஊழலை மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களை அடக்கிவைக்க பாஜக அரசு முயலுகிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நிலம் கையக அவசரச் சட்டத்தின் கீழ் விவசாயிகளின் ஒப்புதலின்றி கையளவு நிலத்தைக் கூட பறிக்க விடமாட்டோம். ராஜஸ்தானில் மட்டுமின்றி நாடு முழுவதும் நிலம் கையச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் மேற்கொள்ளும். இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ஒரு அடி கூட முன்னெடுத்து வைக்க காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.