லோக்சபாவில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 6 அவசர சட்ட நகல்கள் தாக்கல்!
டெல்லி: லோக்சபாவில் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் 6 அவசர சட்டத்தின் நகல்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது. முதல் நிகழ்வாக இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
அதன்பின்னர் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான அவசர சட்ட முன்வரைவுகளின் நகல்களை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
நிலம் கையகப்படுத்துதல், காப்பீட்டுத்துறையில் அன்னிய நேரடி முதலீடு, நிலக்கரி சுரங்கங்கள் ஏலம், இ-ரிக்சாக்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தம் உள்ளிட்ட 6 அவசர சட்ட நகல்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது அவசர சட்டங்களை பயன்படுத்தும் போக்கினை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்தனர். அவசர சட்ட தர்பாருக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த அமளிக்கு இடையே 6 அவசர சட்ட நகல்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.