பீகார் தேர்தல்.. அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்!
பாட்னா: பீகார் மாநில சட்டசபைக்கு அக்டோபர் 12ம் தேதி ஆரம்பித்து, 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
முதல் கட்ட தேர்தலின்போது 49 தொகுதிகளிலும், அக்டோபர் 16ம் தேதி நடைபெறும், 2ம் கட்ட தேர்தலின்போது, 32 தொகுதிகளிலும், அக்டோபர் 28ம் தேதி நடைபெறும் 3ம் கட்ட தேர்தலின்போது 50 தொகுதிகளிலும், நவம்பர் 1ம் தேதி நடைபெறும் 4ம் கட்ட தேர்தலின்போது 55 தொகுதிகளிலும், நவம்பர் 5ம் தேதி நடைபெறும் இறுதி கட்ட தேர்தலின்போது 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நவம்பரில் ரிசல்ட்
ஆக மொத்தம் 243 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 8ம் தேதி வெளியாகிறது. சுமார் 6.68 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வலுவான கூட்டணி
பாஜக ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக, இரு துருவங்களாக இருந்த நிதீஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகியவை தேர்தலை சந்திக்க உள்ளன. இவர்களுடன் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கைகோர்த்துள்ளது.
நிதிஷ் முதல்வர் வேட்பாளர்
நிதீஷ், லாலு கட்சிகள் தலா 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன. காங்கிரசுக்கு 40 தொகுதிகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்க பேசி முடிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வரான நிதிஷ்குமாரையே முன்மொழிந்துள்ளனர். பாஜக வந்துவிட கூடாது என்ற ஒரே குறிக்கோளுக்காக லாலுவும் ஓ.கே. சொல்லிவிட்டார்.
பாஜக கூட்டணியில் வீக்
மறுமுனை கூட்டணியில், பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சியை தவிர்த்து பார்த்தால், ஜிதன்ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா ஆகிய சிறு வாக்கு சதவீதம் கொண்ட கட்சிகள்தான் அக்கூட்டணியில் உள்ளன.
சவால் காத்திருக்கு
பாஜக கூட்டணியில் இன்னும் முதல்வர் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை, தொகுதிகளும் பங்கீடு செய்யப்படவில்லை. எனவே அந்த ஒரு பெரும் சவாலை இக்கூட்டணி இன்னும் சந்திக்க வேண்டியுள்ளது.
கடந்த தேர்தல்
2010 சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை முறையே 89 மற்றும் 118 தொகுதிகளை வென்று கூட்டணி ஆட்சியமைத்தன.
வெற்றி நிலவரம்
2010ல் ராஷ்டிரிய ஜனதாதளம் 22 தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், இ.கம்யூனிஸ்ட் மற்றும் ஜேஎம்எம் கட்சிகள் தலா 1 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார்கள்.
துருவங்கள் இணைந்தன
பாஜகவில் மோடி வளர்ச்சி அதிகமானதால், அதை விமர்சனம் செய்த நிதிஷ்குமார் யாதவுக்கும், பாஜகவுக்கும் விரிசல் அதிகரித்து, அக்கட்சி கூட்டணியில் இருந்து பிரிந்து லாலுவை நாடி ஆட்சியில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.