வினாத்தாள் திருட்டு... இன்று நடைபெற இருந்த உ.பி. மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து
காசியாபாத்: வினாத்தாள்கள் திருடப்பட்டதால் இன்று உத்திரப்பிரதேசத்தில் நடைபெற இருந்த ஒருங்கிணைந்த முன் மருத்துவ தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இன்று உத்தர பிரதேசத்தில் ஒருங்கிணைந்த முன் மருத்துவ தேர்வு(cpmt) நடை பெறுவதாக இருந்தது. இத்தேர்விற்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, காசியாபாத்தில் அலகாபாத் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வினாத்தாள்கள் வைக்கப் பட்டிருந்த பெட்டிகள் உடைக்கப் பட்டு, வினாத்தாள்கள் சில திருடு போயிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, மர்ம நபர்கள் வினாத்தாளை ரகசியமாக கசிய விட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தை மாவட்ட மாஜிஸ்திரேட்டு சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக அம்மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, இத்தேர்வு வரும் ஜூலை 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்று நடைபெற இருந்த தேர்வு தீடீரென ரத்து செய்யப் பட்டதால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.