எல்லை தாண்டி கைகுலுக்கிய இந்தியா-பாகிஸ்தான் தலைவர்கள்: ஒரு பார்வை
டெல்லி: மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கலந்துகொள்ளவிருக்கின்ற வேளையில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் நாளை டெல்லி வருகிறார். அவர் இருநாட்டு உறவு குறித்து மோடியுடன் வரும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்நிலையில் இந்தியா வந்த பாகிஸ்தான் தலைவர்கள் பற்றி பார்ப்போம்
அஷ்ரப்
கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி இந்தியா வந்த பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரபுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மதிய விருந்து கொடுத்தார். ஆனால் அப்போது இருநாட்டு உறவு குறித்து எதுவும் பேசப்படவில்லை. அஷ்ரப் அஜ்மீர் தர்காவுக்கு செல்லவே இந்தியா வந்தார்.
சர்தாரி
கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி அஜ்மீர் தர்கா செல்ல இந்தியா வந்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருந்து கொடுத்தார். அப்போது அவர்கள் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினர். 2005ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வந்த முதல் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி என்பது குறிப்பிடத்தக்கது.
கிலானி
2011ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி மொகாலியில் நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி பிரதமர் மன்மோகன் சிங்குடன் சேர்ந்து கண்டு ரசித்தார். பின்னர் கிலானிக்கு மன்மோகன் சிங் விருந்து கொடுத்தார்.
முஷாரப்
2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் டெல்லி வந்தார். அவர் டெல்லியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியை காணவும், அஜ்மீர் தர்காவுக்கு செல்லவும் இந்தியா வந்தார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து லாகூர்-அமிர்தசரஸ் இடையே பேருந்து சேவையையும், கோகராபூர்-மொனாபாவ் இடையே ரயில் சேவையையும் அறிமுகப்படுத்த சம்மதம் தெரிவித்தார்.
வாஜ்பாய்
2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி பிரதமர் வாஜ்பாய் இஸ்லாமாபாத் சென்று 12வது சார்க் மாநாட்டின் இறுதி நாளில் பாகிஸ்தான் அதிபர் முஷாரபுடன் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டார்.
ஆக்ரா
2001ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஆக்ராவில் நடந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்தார். அப்போது அவர் பிரதமர் வாஜ்பாயுடன் சேர்ந்து மாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எந்தவித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
நவாஸ் ஷரீப்
1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை லாகூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் சென்றார். அணு ஆயுத சோதனையில் போட்டிபோட மாட்டோம் என்று இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.