டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் ஹேப்பி.. டெல்லியிலிருந்து கர்நாடகா வருகிறது குட்நியூஸ்?
டெல்லி: ஒருவழியாக, டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் காத்திருந்த அந்த நாள் வரப் போவதாக தெரிகிறது. விரைவிலேயே, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் நியமிக்கப்படும் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யூகங்களுக்கு உரம் போடுவதைப் போல, டிகே சிவகுமார் கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு, அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய பொதுச்செயலாளர் அகமது பட்டேல் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
குஜராத் ராஜ்யசபா தேர்தலின்போதும் ,சமீபத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி கட்சி ஆட்சிக்கு ஆபத்து வந்த போதும், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாதுகாக்கக்கூடிய பொறுப்பை இவரிடம் தான் மேலிடம் வழங்கியிருந்தது.
பிடிவாதம்
மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திப்பதற்காக சிவகுமார் சென்றதும், அங்கே மகாராஷ்டிர காவல்துறையினர் உள்ளே விடாததால் கொட்டும் மழையில் கூட வெளியே தர்ணா நடத்தியதும், தேசிய அளவில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்வைத்த காலை பின் வைப்பதில்லை, என்று அறிவித்துவிட்டு ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த அவரை, கடைசியில் காவல்துறை கைது செய்து பெங்களூருக்கு அனுப்பி வைக்கும் நிலைமை ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைமை
டி.கே.சிவகுமாரின் கட்சி ஆதரவு நடவடிக்கைகளால் கவர்ந்து ஈர்க்கப்பட்டுள்ள, மேலிடம், கர்நாடக மாநில தலைவர் பதவியை அவருக்கு வழங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்திய லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மொத்த நிர்வாக குழுவையும் கலைத்தார்.
கட்சி பணி
இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, தினேஷ் குண்டுராவும், செயல் தலைவராக இருந்த ஈஸ்வர் கண்ட்ரேவும் மட்டும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் இப்போது கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கலைந்து விட்ட நிலையில், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன், காங்கிரஸ் விரைவில் கூட்டணியை முறித்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை தனித்து சிறப்பாக வளர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை அறிந்து, சிவகுமாருக்கு தலைவர் பதவி வழங்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மறுக்கும் சிவகுமார்
அதேநேரம், தலைவர் பதவி கேட்டு டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை, சிவக்குமார் மறுத்துள்ளார். பதவிக்கு ஆசைப்பட்டு நான் டெல்லிக்கு வரவில்லை, என்று அவர் தெரிவித்துள்ளார்.