7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற காமுகன்... போலீஸ் முன் கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்!!
ஹைதராபாத்: ஆந்திராவில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற காமுகனை கிராம மக்கள் துடைப்பத்தால் அடித்தும் கல்லால் தாக்கியும் கொன்றனர். போலீசார் முன்னிலையில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 7 வயது மகள் கடந்த 16ந் தேதி மாயமானார். இதனையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை அதே கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்த வாலிபர் சுரேஷ் என்பவன் கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சுரேசின் வீட்டில் இருந்த இருப்பு டிரங் பெட்டியில் சிறுமியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேசை தேடி வந்தனர். இதற்காக 6 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சுரேஷ் தப்பியோடியுள்ளார்.
தகவல் அறிந்ததும் போலீசாரும் அங்கு வந்து சுரேசை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் விடாமல் விரட்டினர்.
ஏலூர் ரயில்வே மேம்பாலத்தில் ஓடிய சுரேஷ் திடீரென்று பாலத்தில் இருந்து கீழே குதித்தான். இதில் அவன் காயமடைந்தான். அவனை மீட்க போலீசார் முயன்றனர். ஆனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கற்களால் சுரேசை தாக்கினர்.
போலீசார் அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் ஆவேசம் அடங்காத பொதுமக்கள் போலீசார் முன்னிலையிலேயே சுரேசை அடித்து உதைத்தனர். இதில் சுரேஷ் உயிரிழந்தான். போலீசாரின் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் ஆந்திர முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.