மாயாவதியை விலைமாதுவுடன் ஒப்பிட்ட பாஜக தலைவர்... ராஜ்யசபாவில் கொந்தளிப்பு!
லக்னோ: பாரதிய ஜனதா கட்சியின் உ.பி. தலைவர் தயா சங்கர் சிங் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநில துணைத் தலைவர் தயா சங்கர் சிங், ஒரு படி மேலே சென்று, மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியை கடுமையாக விமர்சித்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு மாயாவதி சீட்டை விற்பனை செய்து வருகிறார். இவரே ஒரு பெரிய தலைவர், மூன்று முறை முதல் மந்திரியாக இருந்தவர்... ஆனால் மாநிலத்தில் போட்டியிடுபவர்களுக்கு சீட்டை விற்பனை செய்து வருகிறார் ரூபாய் ஒரு கோடிக்கு. பிற்பகலில் யாராவது ரூ. 2 கோடி வழங்கினால் அவருக்கு சீட் கொடுக்கப்படும்.
அதே மாலையில் ஒருவர் ரூ. 3 கோடி வழங்கினால் முன்னாள் வந்தவரை தள்ளிவிட்டு அவருக்கு சீட் கொடுப்பார். 'விலைமகளைவிட மிகவும் மோசமானவர் மாயாவதி'' என்று கடுமையாக விமர்சித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கட்சிகள் போர்க்கொடி
குஜராத் மாநிலத்தில் தலித் வாலிபர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி வரும் நிலையில், மாயாவதியை பாஜக தலைவர் ஒருவர் மோசமாக பேசி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் போர்க்கொடியை உயர்த்தி உள்ளது.
ராஜ்யசபாவில் அமளி
இவ்விவகாரத்தை ராஜ்யசபாவில் எழுப்பிய பகுஜன் சமாஜ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டது. எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் பாஜக தலைவர் சங்கர் சிங்கை கைது செய்யவேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் எஸ்.சி. மிஸ்ரா வலியுறுத்தினார்.
ராஜ்யசபாவில் விவாதம்
நாட்டில் தலித் பிரிவினர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக நாளை ராஜ்யசபாவில் விவாதிப்போம். இவ்விவகாரம் தொடர்பாக தேசம் வன்முறை மற்றும் போராட்டங்களை எதிர்க்கொள்ள நேரிட்டால், அதற்கு பாஜகவே பொறுப்பு என்றார்.
கைது செய்ய கோரிக்கை
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரேணுகா சவுத்ரி பேசுகையில், தலித் பிரிவினர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கும் போது, ஒருவர் இதுபோன்று பேசிஉள்ளார். இன்று சூரியன் அஸ்தமனம் ஆகுவதற்கு முன்னதாக அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
பாஜக தலைவர் மன்னிப்பு
இதற்கிடையே உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா தலைவர் கேஷவ் மவுரியா இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். இது தவறானது என்று நான் நினைக்கின்றேன், நான் மன்னிப்பு கேட்கின்றேன். இதுபோன்ற வார்த்தைகள் இனி பயன்படுத்தப்படாது. சங்கர் சிங்கிடம் மன்னிப்பு கேட்ட கூறி உள்ளோம். அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். என்று கேஷ்வர் மவுரியா கூறினார்.
அருண் ஜெட்லி வருத்தம்
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், மாயாவதிக்கு எதிராக பாஜக தலைவர் ஒருவர் இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தியதில் நான் தனிப்பட்ட முறையில் காயப்பட்டு உள்ளேன். மாயாவதி ஜி உங்களுடைய துயரத்தில் கட்சி பங்கு கொள்ளும் என்று நான் சொல்கின்றேன், இப்பிரச்சனையை கவனிக்கின்றேன், இவ்விவகாரத்தில் உங்களுடன் நாங்கள் நிற்கிறோம் என்று கூறினார்.
சர்ச்சையில் சிக்கும் பாஜக தலைவர்கள்
கடந்த மாதம் பாஜக பெண் எம்.பி. சாத்வி பிராச்சி பேசுகையில், ''முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். நான் அதை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறேன் என்றார். இதுபோன்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பலரும் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.