இரட்டை இலை... தீபா கனவு இப்படி புஸ்சுன்னு ஆயிப்போச்சே...
அஇஅதிமுகவில் உறுப்பினராகக் கூட இல்லாத தீபா கட்சி, கொடி, சின்னத்திற்கு உரிமை கோர முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
Recommended Video
டெல்லி: அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தீபா கட்சியின் கொடி, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறிவிட்டதால் சின்னத்தை மீட்பேன் என்று கூறிய அவரது கனவு கலைந்து விட்டது.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என தீபா தனியாக அரசியல் தொடங்கினார். ஆர்.கே. நகர் தேர்தலில் சுயேச்சையாக படகு சின்னத்தில் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதே தனது கனவு, லட்சியம் என்றும் அதிமுக தொண்டர்கள் தனது பின்னால்தான் இருக்கிறார்கள் என்றும் தீபா கூறினார். தேர்தல் ஆணையத்தில் பிராமணப்பத்திரமும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுக என்ற பெயரை எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.
மதுசூதனன் தலைமை
மதுசூதனன் அவைத்தலைவராக உள்ள கட்சியே அதிமுக என்றும், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பெரும்பாண்மை உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னம்
தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியுள்ளதால் எடப்பாடி அணியினர் இனி இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்தலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு 111 எம்.எல்.ஏ.க்கள், 42 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது என்று 83 பக்கங்கள் கொண்ட தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினகரன் அணிக்கு 3 எம்.பி.க்கள், 20 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவு இருப்பதாகவும், புதுச்சேரியில் 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி அணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
தீபா உறுப்பினர் இல்லை
அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தீபா, அக்கட்சிக்கு உரிமை கோர முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தீபாவிற்கு நிச்சயம் அதிர்ச்சியான தகவலாகத்தான் இருக்கும்.
கலைந்த கனவு
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தொடங்கிய தீபா ஆர்.கே. நகர் தேர்தலில் சுயேச்சையாக படகு சின்னத்தில் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதே தனது கனவு, லட்சியம் என்றும் அதிமுக தொண்டர்கள் தனது பின்னால்தான் இருக்கிறார்கள் என்றும் தீபா கூறினார். ஆனால் அவரது லட்சியமும், கனவும், இப்படி கலைந்து விட்டதே. இனி யாரும் தீபா வீட்டு வாசல் முன்பு நின்று தீபாம்மா வாழ்க என்று முழக்கமிட மாட்டார்களோ?