எஃப்.எம். ஏலத்தில் சன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பு விவகாரம்..மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி : எஃப்.எம் ரேடியோ நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க அனுமதி கோரி சன் குழுமம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மின்னணு ஏலத்திற்கு முன்னோட்டமாக இன்று நடைபெற்ற ஒத்திகை ஏலத்தில் சன் குழுமத்தின் ரெட் எஃப்.எம் பங்கேற்கவும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
69 நகரங்களில் 135 எஃப்.எம் ரேடியோ நிலையங்களுக்கான மூன்றாம் கட்ட ஏலம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமம் அளித்த விண்ணப்பத்தை, பாதுகாப்பு காரணம் கருதி ஆய்வுக்குழு ஏற்க மறுத்தது.
இதனை எதிர்த்து சன் குழுமத்தின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.