டெல்லி உள்ளாட்சி தேர்தல்: 54 சதவீதம் வாக்குப்பதிவு
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற மூன்று நகராட்சி வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
டெல்லியின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு நகராட்சிகளில் உள்ள 272 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.க.,வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லியில் உள்ள 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு நேற்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதில் 2,500 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தேர்தலையொட்டி 57,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், தேர்தலுக்கான முடிவுகள் வரும் 26-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
வாக்குப் பதிவு தொடங்கியது முதல் 18 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இது மாற்றப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மாலை 5.30 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது. இந்த தேர்தலில், 54 சதவிகித வாக்கு பதிவானது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.