அடடா இந்த "நேரு"வால எல்லாம் போச்சே.... "பஸ்ஸை" தவற விட்ட பஸ்ஸி!!
டெல்லி: தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸியின் பெயரை மத்திய தகவல் ஆணையர் பதவிக்கான பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வரும் பஸ்ஸி, இம்மாத இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் வேறொரு பதவியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
மேலும், மத்திய தகவல் ஆணையர் பதவிக்கான தேர்வுப் பட்டியலிலும் பஸ்ஸியின் பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானது. தகவல் ஆணையத்தில் மொத்தமுள்ள 10 ஆணையர் பதவிகளில் தற்போது மூன்று இடங்கள் காலியாகவுள்ளன. அந்தப் பதவிகளை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு விரைவில் கூடி முடிவு எடுக்கவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஸ்ஸியின் பெயர்...
அந்தத் தேர்வுப் பட்டியலில் இடம்பெறுவோர் பெயர்களை மத்திய அமைச்சரவைச் செயலாளர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழு கடந்த நவம்பர் மாதம் இறுதி செய்தது. அதில் பஸ்ஸியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.
சர்ச்சை...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில், பாஜகவினருக்கு ஆதரவாக டெல்லி காவல்துறையை அவர் இயக்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து பஸ்ஸியை விமர்சித்து வருகின்றனர். அவரது நிர்வாகத் திறமையும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. பஸ்ஸி மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் கூட அதிருப்தி அடைந்துள்ளனர்.
பஸ்ஸியே காரணம்...
கன்யாகுமார் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கன்யா குமாரின் பாதுகாப்புக்கு பஸ்ஸிதான் பொறுப்பு என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
காங்கிரஸ்...
இதனால், பஸ்ஸியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறப் போகும் அவருக்கு, ஓய்வுக்குப் பின்னர் எந்தப் பணியும் தரக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தகவல் ஆணையர் பதவி...
இந்த சூழ்நிலையில், மத்திய தகவல் ஆணையத்தில், தகவல் ஆணையர் பதவிக்கான நியமனத்தை பிரதமர் தலைமையிலான கமிட்டிதான் முடிவு செய்யும். இக்கமிட்டியில், பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள். தற்போது லோக்சபாவில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த்க குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில், பஸ்ஸியின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நீக்கம்...
இதனால், தகவல் ஆணையர் பதவிக்கான பெயர் பட்டியலில் இருந்து பஸ்ஸியின் பெயரை மத்திய அரசு நீக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.