குளிரில் "காயும்" டெல்லிவாசிகள்- இன்று மட்டும் 30 விமானங்கள் "லேட்"!
டெல்லி: டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக 30 விமானங்கள் தரை இறங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
வடமாநிலங்களில் தாங்க முடியாத அளவுக்கு குளிர் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசியது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிர் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வட மாநிலங்களில் பனி மூட்டம் அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று அதிகாலை பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
பனிப்பொழிவு அதிகம்:
11 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்ப சூழ்நிலையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. 10 மீட்டருக்குள் வருபவர்களை கூட பார்க்க முடியாத அளவுக்கு பனி இருந்தது.
தாமதமாகிய சேவைகள்:
கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் இன்று அதிகாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் தாமதமாக தொடங்கின.
ஊர்ந்து சென்ற வாகனங்கள்:
பஸ் மற்றும் கார்கள் விளக்கு வெளிச்சத்தில் மெல்ல சென்றன. விமான நிலையப் பகுதியிலும் அதிக பனிப்பொழிவு இருந்ததால் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
விமானங்கள் தாமதம்:
23 உள்நாட்டு விமானங்கள், 7 சர்வதேச விமானங்கள் தரை இறங்க முடியாமல் தவித்தன. அந்த விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காலை 7 மணிக்கு பிறகே வெளிச்சம் வந்தது. அதன் பிறகு 30 விமானங்களும் தாமதமாக டெல்லி வந்தடைந்தன.