ஒடிஷா வங்கியில் ரூ1 கோடி செல்லாத நோட்டுகள் கொள்ளை- மர்ம நபர்கள் துணிகரம்!
ஒடிசா மாநில வங்கியிலிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புவனேஸ்வர்: 500 , 1,000 ரூபாய் செல்லாத நோட்டுகளை ஒடிசாவில் உள்ள ஒரு வங்கியிலிருந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண அன்றாடம் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தினால் எதிர்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த களபேரத்துக்கு இடையே செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை கொள்ளை அடிக்கும் சம்வங்களும் அரங்கேறி வருகின்றன. வங்கி ஊழியர்கள் சிலரின் ஆதரவுடன் பல்வேறு முறைகேடுகளும் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளன.
இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் ஒடிசா மாநிலத்திலும் நடந்துள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
அந்த மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில், ஒடிசா கிராமிய வங்கியின் கிளை உள்ளது.அந்த வங்கியில் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு பெரிய பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன; அவற்றின் மொத்த மதிப்பு, 8 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் திங்கள்கிழமை காலை வங்கியை திறந்த அதிகாரிகள், அந்த பெட்டி, உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். மேலும்,அந்த பெட்டியை சோதனையிட்டபோது, அதில் இருந்த, 1.15 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் கொள்ளைஅடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள், போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது, 'வங்கியில் ஊழியர்களின் உதவி இல்லாமல், இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை' என தெரிவித்தனர்.