மிரட்டும் டெங்கு... தமிழகத்தில் 2300 பாதிப்பு… 2015ல் இருமடங்கானது
டெல்லி: நாடுமுழுவதும் 19704 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டினைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும். இதில் 50 சதவீதம் தென் மாநில மக்கள் பாதிக்கப்பட்டவர்கள். தென் மாநிலங்களில் மட்டும் 10289 பேர் என தேசிய நோய் பரப்பிகளால் பரவும் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தாண்டில் இதுவரை 2300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெங்கு காய்ச்சல்
உயிர்கொல்லி நோயான டெங்கு காய்ச்சல் தற்போது நாடுமுழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்ணின் பின்பகுதியில் வலி, தலைசுற்றல், வாந்தி, தோல் சிவந்து போவது, ரத்தபோக்கு மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், உடலில் ரத்த புள்ளிகள் தோன்றுதல், அடி மூட்டுகளில் அரிப்போ, உடல் முழுவதும் அரிப்போ ஏற்படுதல் இவை அனைத்தும் டெங்கு காய்ச்சலுக்கான அடிப்படை அறிகுறிகளாகும்.
டெங்கு கொசு
ஏடிஎஸ் வகை கொசு கடிக்கு ஆளானவர்கள் மிக அதிகளவில் டெங்கு கொசுவுக்கு ஆளாகின்றனர். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் பெரும்பாலும் பருவ மழைகாலங்களில் நன்னீரில் உற்பத்தியாகிறது. எனவே தண்ணீர் தேங்குவது தடை செய்யவேண்டும். பாத்திரங்களில் தண்ணீர் இருந்தால் மூடி வைத்து பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
டெல்லியில் டெங்கு
கடந்த சில வாரங்களாக தலைநகர் டெல்லியில் டெங்குகாய்ச்சலுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
19704 பேர் பாதிப்பு
நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வடமாநிலங்களை காட்டிலும் தென்னிந்தியாவில் அதிகம். நாடுமுழுவதும் இந்தமாதம் முதல் வாரம்வரை 19704 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர். தென் இந்தியா மாநிலங்களில் மட்டும் 10289 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நோய் பரப்பிகளால் பரவும் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா நம்பர் 1
கர்நாடகத்தில் மிக அதிக பட்சமாக 3419 பேரும், கேரளாவில் 2930 பேரும், தமிழகத்தில் 2300 பேரும், ஆந்திராவில் 1681 பேரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இருமடங்காக உயர்வு
கடந்த 2014ல் தமிழகம் முழுவதும் 2804 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதில் மூன்றுபேர் இறந்தனர். நடப்பு ஆண்டில் இதுவரை 2300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த 2014 செப்டம்பர் வரையிலான காலத்தில் தமிழகத்தில் 1032 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தாண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் அதிகம்
தமிழகத்தில் மிக அதிகமாக நடப்பு ஆண்டில் திருப்பூரில் 231 பேரும், தேனியில் 186 பேரும், கரூரில் 162 பேரும், திருச்சியில் 136 பேரும், கிருஷ்ணகிரியில் 107 பேரும் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. கடந்த இரு வாரங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் மர்மகாய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
கல்லூரி மாணவி மரணம்
டெங்கு காய்ச்சல் அறிகுறி பலருக்கு கண்டறியப்பட்டது. தர்மபுரியில் இரு தினங்களுக்கு முன் கல்லூரி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இறந்தார். ஆனால் இறந்தவர்கள் குறித்த பல விவரங்கள் மூடி மறைக்கப்படுவதாகவே கூறப்படுகிறது.
சிறுவர்கள் மரணம்
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் கடந்த 3 மாதங்களில் காய்ச்சலுக்கு இறந்தவர்களில் 4 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டது. இதில் 2 சிறுவர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள். ஆனால் தமிழகத்தில் மொத்தமாகவே இதுவரை 5 பேர் மட்டுமே இறந்திருப்பதாக அரசுக்கு புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிக்குன் குனியா பாதிப்பு
டெங்குவை போல் கொசு மூலம் பரவும் மற்றொரு வகை காய்ச்சல் சிக்குன் குனியா. கடந்தாண்டை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சிக்குன் குனியா பாதிப்பு இந்தாண்டு குறைவு. கடந்த ஆகஸ்ட் வரை 176 பேருக்கு சிக்குன் குனியா கண்டுபிடிக்கப்பட்டது. கடந்தாண்டு 302 பேர் சிக்குன் குனியாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நாடுமுழுவதும் பாதிப்பு
கிருஷ்ணகிரியில் 59 பேரும், திருச்சியில் 24 பேரும், சென்னையில் 17 பேரும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய அளவில் கடந்தாண்டை காட்டிலும் பாதிப்பு அதிகம். கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு 13,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டில் 9684 பேர் மட்டுமே ஆகஸ்ட் மாதம் வரை பாதிக்கப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.